இலங்கை உள்பட பல நாட்டு அகதிகளை சிறைவைத்துள்ள நவுருத்தீவு முகாமின் பொறுப்பு கைமாறுகிறதா?

அமெரிக்காவில் சிறைச்சாலைகளை நிர்வகித்து வரும் சர்ச்சைக்குரிய தனியார் நிறுவனத்துக்கு நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாமை நிர்வகிப்பதற்கான லாபகரமான ஒப்பந்தம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உருவாகி இருக்கிறது. 

இந்நிலையில் Management and Training Corporation எனும் அந்நிறுவனம் முழுமையாக அம்முகாமை கையில் எடுக்கும் முன்னர் அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. 52 நாட்களுக்கான ஆயத்த பணிகளுக்காக அந்நிறுவனத்துக்கு 4.6 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை அவுஸ்திரேலிய அரசு செலுத்துகிறது.

இந்நிறுவனத்தின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு தோல்விகளால் தடுப்பில் இருந்த பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானது, அரசாங்கத்துக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் ஆயிரக்கணக்கான டாலர்கள் அபராதம் செலுத்தியது, தவறான குடிவரவுத் தடுப்பு காவல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை கொண்ட நிறுவனத்துக்கு நவுருத்தீவு முகாமை நிர்வகிப்பதற்கான பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

தி கார்டியன் ஊடகத்தின் தகவல் படி, தற்போது நவுருத்தீவு முகாமை நிர்வகித்து வரும் அவுஸ்திரேலியாவின் Canstruct நிறுவனத்தின் ஒப்பந்தம் வரும் செப்டம்பர் 30ம் திகதியுடன் முடிவடைய இருக்கிறது. இதைத் தொடர்ந்து வரும் ஒக்டோபர் 1 முதல் அமெரிக்க நிறுவனம் இம்முகாமை நிர்வகிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பான முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்ற போதிலும் ஆயத்த பணிகளுக்கான ஆரம்பக்கட்ட ஒப்பந்தத்தில் அவுஸ்திரேலிய உள்துறை கையெழுத்திட்டிருக்கிறது.

இத்தடுப்பு முகாமில் சிறைவைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்த போதிலும், இம்முகாமை நடத்துவதற்கு பெருஞ்செலவு செய்யப்பட்டு வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ச்சியான ஒப்பந்தங்களின் மூலம் 1.82 பில்லியன் அவுஸ்திரேலிய டாலர்களை Canstruct நிறுவனம் பெற்றிருக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டு முதல் நவுருவுக்கு புதிதாக எந்த அகதியும் அனுப்பப்படாத போதிலும் மாதந்தோறும் வழக்கமாக செலவு செய்யப்படும் 35 மில்லியன் முதல் 40 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களே இம்முகாமிற்காக அவுஸ்திரேலிய அரசு செலவு செய்திருக்கிறது. நவுருத்தீவு முகாமில் வைக்கப்பட்டிருந்த அகதிகளின் எண்ணிக்கை 1000+ யிலிருந்து சுமார் 100 ஆக குறைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அரசின் கணக்குப்படி, 2021ம் ஆண்டில் ஒரு அகதியை நவுருத்தீவில் சிறை வைத்திருப்பதற்காக ஆண்டுக்கு 4.3 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் செலவு செய்யப்பட்டிருக்கிறது.