குச்சவெளி இளைஞனின் மரணம் நீதிக்கு புறம்பானதா? இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

குச்சவெளி இளைஞனின் மரணம்

குச்சவெளி இளைஞனின் மரணம்: திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் தண்ணீருடன் கூடிய சேற்றுப் பகுதியில் இருந்து கடந்த 06.01.2022 அன்று சடலமாக மீட்கப்பட்ட குச்சவெளி நகர்ப் பகுதியினை சேர்ந்த இளைஞரான ஜமீல் மிஸ்பரின் மரணம் தொடர்பிலும் குச்சவெளிப் காவல்துறையினருக்கு  எதிராக பொதுசன ஊடகங்கள் வழியாக அவரது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய  அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் பயணத்தில் இருந்த போது 05.01.2022 அன்று குச்சவெளிப் காவல்துறையினரால் பேருந்தினை இடைமறித்து கைது செய்ய முற்பட்ட போது அவர் தப்பித்து காட்டுப்பகுதியினை நோக்கி ஓடியதாக கூறப்படுகின்றது. அதே நேரம்  காவல்துறையினரும் குறித்த இளைஞனை கைது செய்ய  காட்டுப்பகுதிக்குள் தொடர்ந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பின் மறுநாள் காலையில் அவரது உடலம் நீருடனான சேற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் அவரது உறவினர்களால் காவல்துறையினருக்கு  எதிராக பரவாலான குற்றச்சாட்டுக்கள் ஊடகங்கள் வழியாக முன்வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளரான சட்டத்தரணி ஆர்.எல் வசந்தராஜா அவர்களை தொடர்புகொண்டு வினவியபோது, குறித்த சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவின் திருகோணமலைப் பிராந்திய காரியாலயமானது விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் 1996 ஆம் ஆண்டின் 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 14 இற்கு அமைய தனது சொந்த பிரேரணை அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்படி விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் உறுதிப்படுத்தினார்.

Tamil News