அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ போராடும் ஈரானிய அகதிகள் 

அவுஸ்திரேலியாவில் தங்களை நிரந்தரமாக வாழ அனுமதிக்கக் கோரி மெல்பேர்ன் நகரில் உள்ள குடிவரவுத்துறை அலுவலகத்தின் வெளியே காத்திருப்பு போராட்டத்தினை கடந்த நவம்பர் 3ம் திகதி ஈரானிய அகதிகள் தொடங்கியிருக்கின்றனர்.

தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறுகிய கால விசாக்களுக்கு பதிலாக நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமையை வழங்குமாறு ஈரானிய அகதிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

தற்போது ஈரானில் ஏற்பட்டுள்ள எழுச்சி மூலம் அப்பாவி ஈரானிய மக்கள் மீது ஈரானிய அரசு நிகழ்த்தும் அடக்குமுறைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக ஈரானிய அகதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தற்போது இணைப்பு விசாவில் உள்ள இப்ராஹிம் எனும் ஈரானிய அகதி ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் தனது விசாவை புதுப்பிக்க வேண்டிய சூழல் உள்ளதாகக் கூறுகிறார். ஈரானிய காவல்துறையினரால் சித்ரவதைக்கு உள்ளாகி கடந்த 2013ம் ஆண்டு அவர் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். ஆனால் இன்று வரையிலும் அவருக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமை வழங்கப்படவில்லை.

இப்படி இவரைப் போல பல நூறு அகதிகள் எவ்வித தீர்வுமின்றி நிச்சயத்தன்மையற்ற நிலையில் பல ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் தவித்து வருகின்றனர்.