ஈரான், சீனா, ரஷ்ய ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் கூட்டு பயிற்சி

இந்தியப் பெருங்கடலில் கூட்டு பயிற்சி

இந்தியப் பெருங்கடலில் கூட்டு பயிற்சி: ஈரான், சீனா, ரஷ்ய ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலின் வடக்கே கூட்டுப் பயிற்சி மேற்கொண்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடற் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக மூன்று நாடுகளும் விளக்கமளித்துள்ளன.

ஈரானின் 11 கப்பல்களும், மூன்று ரஷ்ய கப்பல்களும், இரண்டு சீன கப்பல்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர். இந்தப் பயிற்சியில் இரவு நேரங்களில் எப்படி சண்டையிடுவது, கடலில் மீட்புப் பணியில் எப்படி ஈடுபடுவது போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யா, ஈரான், சீனா இணைந்து நடத்தும் மூன்றாவது பயிற்சி இதுவாகும்.

பயிற்சி குறித்து ஈரான் செய்தித் தொடர்பாளர் முஸ்தபா கூறும்போது, “ இந்த கூட்டுப் பயிற்சியின் போது இரவு நேரங்களில் கடற்பரப்பில் உள்ள வீரர்கள் குறி பார்த்துச் சுடுதல், கடலின் நடுவே தீப்பிடித்த போர்க்கப்பலை எப்படி காப்பது, எதிரிகளால் சூழப்பட்ட கப்பல் மற்றும் அதில் உள்ள வீரர்களை காப்பாற்றுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்த கூட்டுப் பயிற்சியின் மூலமாக மூன்று நாடுகளும் தங்களது நாட்டு கடல் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளன” என்றார்.

இம்மாதிரியான கூட்டு பயிற்சிகள் மூன்று நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் என்று ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News