ஒரே நாளில் பெண் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்

ஒரே நாளில் பெண் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றி சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்தைப் பெற்றுள்ளது ஈரான் அரசு. இந்தத் தண்டனை பற்றி அரசோ, உள்ளூர் ஊடகங்களோ எதுவும் சொல்லாத நிலையில், நார்வேயைத் தலைமையிடமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு Iran Human Rights (IHR) இத்ததகவலை உலகின் பார்வைக்குக் கொண்டுவந்துள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 12 பேரும் ஈரானின் மதச் சிறுபான்மையினரான பாலுச் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவருக்கும் கடந்த திங்கள்கிழமையன்று ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லைகளை ஒட்டியுள்ள சிஸ்டான் பாலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜகேதான் சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பாலுச் சிறுபான்மையின மக்கள் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள். ஈரானி ஷியா முஸ்லிம்கள் தான் ஆதிக்க சக்தியினர்.

மரண தண்டனைக்கு உள்ளான சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த 12 பேரில் 6 பேர் போதைப் பொருள் கடத்தலுக்காகவும் 6 பேர் கொலைக்காகவும் தண்டிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் பெண் ஒருவரும் அடங்குவார். அவர் கணவரை கொலை செய்ததாக கைதானவர்.

இன, மத சிறுபான்மையினரை குறிவைத்து தண்டனை: ஈரானில், இதுபோன்ற மரண தண்டனைகள் இன, மத சிறுபான்மையினரான வடமேற்கில் உள்ள குர்தூஸ், தென்மேற்கில் உள்ள அரபுகள் மற்றும் தென் கிழக்கில் உள்ள பாலுச் இனத்தவரை குறிவைத்தே நடத்தப்படுகிறது என்று ஈரான் மனித உரிமைகள் அமைப்பு Iran Human Rights (IHR) அமைப்பு தெரிவிக்கின்றது.

மேலும், 2021ல் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் 21% பேர் பாலுச் சிறுபான்மையினர். ஷியா பிரிவினர் 2 முதல் 6 சதவீதம் பேர் தான் தண்டிக்கப்பட்டனர். 2021ல் மொத்தம் 333 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 25% அதிகம்.

சர்வதேச பொது மன்னிப்பு சபையின் அறிக்கையின்படி ஈரானில் 2021ல் மரண தண்டனைகளின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. பொது மன்னிப்புச் சபையும் மரண தண்டனைகளை ஈரான் அரசியல் அடக்குமுறையாகக் கையாள்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளது.

Tamil News