காவல்துறையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கப்பட்டமை

காவல்துறையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை விரைவில் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருத்தார். அவருடைய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்கள் இடம்பெற்றன.

இந்நிலையில், மட்டுவில் பகுதியில் பிரதமர் பொருளாதார மத்திய நிலையத்தை திறக்கும் இடத்தில் ஆர்பாட்டம் மேற்கொள்வதற்காக பேருந்தில் சென்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை பேருந்தில் இருந்து இறங்கவிடாது தடுத்த காவல்துறையினர்  அதையும் மீறி இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்தவர்கள் வைத்திய சாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் சம்பவத்தில் காயமடைந்த இருவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார்கள்.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவின் தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.