தொழில்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் ஆசிரியர்களை, அரசியல்வாதிகள் அச்சுறுத்துவது குறித்து மனித உரிமைகளிற்கான நிலையம் (CHR) கண்டனம் வெளியிட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவதற்காக அரசியல்வாதிகள் பெற்றோர்கள் என தெரிவித்து வன்முறை கும்பல்களை ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் ஈடுபடச் செய்கின்றனர் என மனித உரிமைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
இத்தகைய அச்சுறுத்தல்கள் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களிற்கு முரணாணவை என்றும் மனித உரிமைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இனந்தெரியாத கும்பல்கள் ஆசிரியர்களையும் அதிபர்களையும் 21 ம் திகதிக்கு வேலைக்கு வரவேண்டும் என மிரட்டுவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இவ்வாறான நடவடிக்கைகள் ஆபத்தான முன்னுதாரணங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் நீண்டகால சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை கோரி ஆசிரியர்களும் அதிபர்களும் 100 நாட்களாக இணையவழி கற்பித்தலில் இருந்து விலகி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அரசாங்கம் முதலில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பயன்படுத்தி அவர்களின் போராட்டத்தை ஒடுக்க முயன்றது தற்போது நேரடி அச்சுறுத்தல்களில் ஈடுபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.