நல்லிணக்கத்தில் அக்கறையிருந்தால் 13 இல் பறிக்கப்பட்டதை வழங்குங்கள்: சித்தார்த்தன்

13 இல் பறிக்கப்பட்டதை வழங்குங்கள்
“இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி – இந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல வேண்டுமென்ற கரிசனை இருந்தால் – அதில் அர்பணிப்பிருந்தால் – முதலில் அரசியல் யாப்பில் இருப்பவற்றை நிறைவேற்றுங்கள். 13 இலிருந்து பறிக்கப்பட்ட விடயங்களை மீளவும் தமிழ் மக்களுக்கு வழங்குங்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யும் புளொட் தலைவருமான த.சித்தார்த்தன் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தமது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:

“அரசியல் யாப்பிலுள்ள 13வது திருத்தச் சட்டத்தை இன்று வரையில் நீங்கள் முழுமையாக அமுல்படுத்தவில்லை. அரசியல் யாப்பை மீறுவதில் நீயா?– நானா? என்று போட்டிபோடுகின்றீர்கள். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த மறுப்பதானது அரசியல் யாப்பை அப்பட்டமாக மீறும் ஒரு செயலாகும். இதனை உணர முடியாதளவிற்கு எதேச்சாதிகாரம் உங்களின் கண்களை மறைத்திருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதியும் இப்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, 13 பிளஸ் தொடர்பில் பேசினார். இந்தியாவிற்கும் சர்வதேசத்திற்கும் அவ்வாறான வாக்குறுதியை வழங்கியிருந்தார். 2009இல் யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து, இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில், 13 இற்கு அப்பால் சென்று தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக மஹிந்த வாக்குறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதிக்கு என்ன நடந்தது?

இப்போது மீண்டும் உள்ளக பொறிமுறை தொடர்பில் பேசுகின்றீர்கள்! புலம்பெயர் சமூகத்துடன் பேசவுள்ளதாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அரசியல் யாப்பில் இருக்கின்ற 13வது திருத்தச் சட்டத்தையே முழுமையாக அமுல்படுத்த மறுத்துவரும், உங்களது, உள்ளக பொறிமுறையை சித்தசுவாதினமுள்ள எவராவது நம்புவாரா?

இந்த அரசாங்கத்தினால் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியுமென்பதில் எந்தவொரு நம்பிக்கையும் என்னிடமில்லை. ஏனெனில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு காரியத்தையும் நீங்கள் செயலில் காண்பிக்கவில்லை. உண்மையில், நீங்கள் கூறும் புதிய அரசியல் யாப்பானது – ஒற்றையாட்சி முறைமை நீக்கப்பட்ட – தமிழ் மக்களின் சமத்துவம் கௌரவத்தை உறுதிப்படுத்தும் அரசியல் ஏற்பாடுகளை கொண்டிருக்கின்ற – முக்கியமாக, அவற்றை பாராளுமன்ற பெரும்பாண்மையின் ஊடாக மீளவும் பறித்தொடுக்கமுடியாத ஏற்பாடுகளை கொண்டிருக்குமானால், அப்படியானதொரு அரசியல் யாப்பை நாம் இரு கரம்கூப்பி வரவேற்போம். ஆனால், நடைபெற்றுக் கொண்டிருக்கும் விடயங்களை உற்றுநோக்கினால், அரசாங்கத்திடம் அப்படியான எந்தவொரு நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை.

வவுனியாவில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றமொன்றை மேற்கொண்டு வருகின்றீர்கள். அனுராதபுர மாவட்டத்தின் கீழுள்ள நான்கு சிங்கள கிராம சேவையாளர் பிரிவுகளை,வவுனியா மாவட்டத்துடன் இணைத்து, இனப்பரம்பலை மாற்றியமைக்க திட்டமிடுகின்றீர்கள். மாகாண எல்லைகளை நிர்வாக ரீதியாக மாற்றமுடியாதென்பது தெரிந்திருந்தும் நாட்டின் சட்டத்திற்கு எந்தவித மதிப்புமளிகாமல் எதேச்சதிகாரமாக, தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றீர்கள்.

மாகாண சபை செயலற்றிருக்கும் சூழலை பயன்படுத்திக் கொண்டு, ஆளுநர்கள் மூலம், திட்டமிட்டு இந்த விடயங்களை மேற்கொண்டு வருகின்றீர்கள். மாகாண நிர்வாகத்தின் கீழுள்ள பாடசாலைகள், வைத்திசாலைகளை திட்டமிட்டு மத்திய அரசின் கீழ் கொண்டு செல்கின்றீர்கள். அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்கூட இப்போது13வது திருத்தச்சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் ஒரு இரகசிய படையணியாக தொழிற்படுகின்றதோ என்னும் சந்தேகம் எழுந்திருக்கின்றது. ‘சுகாதார துறையை மத்தியமயப்படுத்துதல்’ என்னும் தலைப்பில 8-11-2021 அன்று, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் செனகல் பெர்ணாண்டோ, வடக்கிலுள்ள கிளைகளுக்கு கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றார். அரசாங்கத்திற்கு தெரியாமல் இவ்வாறானதொரு கடிதத்தை அவர் அனுப்பி வைத்திருக்க வாய்ப்பில்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட, 13வது திருத்தச் சட்டத்தை எவ்வாறாயினும் இல்லாமலாக்க வேண்டு மென்னும் இனவாத முனைப்பின் தீவிரத்தன்மையே இந்த கடிதம் உணர்த்துகின்றது.

அப்படியாயின் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பது, நாட்டிலும் – நாட்டை நிர்வகிக்கும் சட்டத்திலும் – தமிழ் பேசும் மக்களுக்கு எந்தவொரு இடமும் இல்லை, இருக்கவும் கூடாது, தமிழ் மக்கள் இந்த நாட்டில் வேண்டுமானால் இரண்டாம்தர பிரஜைகளாக வாழ்ந்துவிட்டு போகலாம். இதுதான் அரசாங்கத்தின் ஒரே நாடு ஒரே சட்டமா?

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி – இந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல வேண்டுமென்ற கரிசனை இருந்தால் – அதில் அர்பணிப்பிருந்தால் – முதலில் அரசியல் யாப்பில் இருப்பவற்றை நிறைவேற்றுங்கள். ஏற்கனவே 13 இல் பறிக்கப்பட்டதை வழங்குங்கள். எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான உங்களின் அர்ப்பணிப்பை நிரூபித்து காட்டுங்கள். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற 13வது திருத்தச் சட்டத்தை இல்லாமலாக்க வேண்டும் என்னும் ஒரேயொரு நோக்கம் கொண்ட உங்களது புதிய யாப்பு முயற்சியை கைவிட்டு முதலில் இந்த நாட்டின் அரசியல் யாப்பிற்கு உண்மையானவர்களாக நடந்து கொள்ளுங்கள். 13 ஐ முழுமையாக அமுல்படுத்துங்கள்” எனத் தெரிவித்தார்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad நல்லிணக்கத்தில் அக்கறையிருந்தால் 13 இல் பறிக்கப்பட்டதை வழங்குங்கள்: சித்தார்த்தன்