இலங்கையில் குற்றவழக்குகளில் தப்பியவர்கள் ஊடுருவலாம் என்ற சந்தேகத்தில் தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள வான் தீவு, முயல் தீவு, நல்ல தண்ணி தீவு உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் தொடரும் போராட்டம், வன்முறையையடுத்து இந்திய உள்துறை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அங்கிருந்து பலரும் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அங்கு நடைபெற்று வரும் வன்முறையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய 50 பேர் தப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள், தமிழ்நாட்டிற்குள் ஊடுருவாமல் தடுக்க, கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்ட கடற்கரை முழுவதும், ரோந்து கப்பல் மற்றும் படகு மூலம் காவல்துறை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள வான் தீவு, முயல் தீவு, நல்ல தண்ணி தீவு உள்ளிட்ட பகுதிகளில் இலங்கையில் இருந்து தப்பி வருபவர்கள் மறைந்து இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் அங்கு காவல்துறையினர் திடீர் சோதனையும் நடத்தி வருகின்றனர்