Home செய்திகள் மாவீரர் வராம்  ஆரம்பம்: முல்லைத்தீவில் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரம்

மாவீரர் வராம்  ஆரம்பம்: முல்லைத்தீவில் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரம்

முல்லைத்தீவில் பாதுகாப்பு கெடுபிடிகள்

தமிழீழ மாவீரர்கள் நினைவாக உலகமெங்கும் வாழும்  தமிழர்களால் நினைவு கூரப்படுகின்ற மாவீரர் நாளின், மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந் நிலையில், முப்படைகளாலும் முல்லைத்தீவில் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் இருந்த வீதி தடைகளுக்கு மேலதிகமாக வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு வீதி சோதனை நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. மாவீரர் துயிலுமில்ல வளாகங்களை சூழவும் இராணுவம் மற்றும்  காவல்துறையினர்  கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2018 ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில்  மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய அனுமதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிலையில்  கடந்த வருடம் (2020) முதல் புதிதாக ஆடசிக்கு வந்த கோட்டாபய அரசாங்கமானது  நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று  மாவீரர் நாள்  நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்து வருகின்றது.


இதனிடையே இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில்   காவல்துறையினர் கடந்த 17.11.2021 அன்று முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, முள்ளியவளை, மல்லாவி, ஜயன்கன்குளம், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்,மாங்குளம் ஆகிய ஏழு காவல் நிலையங்களை  சேர்ந்த காவல்துறையினரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில்,  47 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா  தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு தடையுத்தரவுகளை பெற்ற காவல்துறையினர் உரியவர்களுக்கு தடையுத்தரவுகளை வழங்கியுள்ள போதும், எங்காவது மாவீரர் நாள் நிகழ்வுகள் நினைவு கூரப்படலாம்  என்ற சந்தேகத்தில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை அரச புலனாய்வாளர்கள் ,இராணுவம், காவல்துறையினர்  உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில்  அதிகளவான வீதி தடைகள் கொரோனாவை காரணம் காட்டி அமைக்கப்பட்டிருந்தாலும் அதற்கு மேலதிகமாக அண்மையில் புதிய வீதி தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தண்ணீர் ஊற்று சந்தி ,ஒட்டுசுட்டான்  உள்ளிட்ட  பல்வேறு நகரங்களில் புதிய வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள  சுமார் 15 க்கு மேற்பட்ட  வீதி தடைகளில் வீதியால் பயணிப்போர் திடீரென  சோதனைகளுக்கு உட்படுத்தப் படுவதோடு சிலர் பதிவுசெய்யப்படுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில்  அமைந்துள்ள ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் ,வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்,கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லம்,முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம்,அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம்,தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்,மற்றும் 2009ம் ஆண்டு நடைபெற்ற யுத்த காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம், இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்,முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம்,இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம் என மாவட்டத்தில் உள்ள துயிலுமில்ல பகுதிகளை அண்மித்து வீதி சோதனை சாவடிகளை அமைத்துள்ளதோடு துயிலுமில்ல பகுதிகளுக்குள் யாரும் செல்லாதவாறு  பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு இராணுவத்தினர், காவல்துறையினர் நிலைகொண்டுள்ளனர்.

இவ்வாறான சூழலை அரசு ஏற்படுத்தியுள்ளமையினால்  மக்கள் மத்தியில் அச்ச சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

Exit mobile version