யாழ்ப்பாணத்தில் தொற்று குறைந்தபாடாக இல்லை; யாழ். அரச அதிபர் சுட்டிக்காட்டு

யாழ்ப்பாணத்தில் தொற்று குறைந்தபாடாக இல்லையாழ்.மாவட்டத்தில் தொற்றுநிலைமை சரியான முறையில் குறைந்தபாடாக இல்லை. கடந்த சில நாள்களில் குறைந்து செல்லும் போக்கைக் காட்டியது. எனினும் யாழ்ப்பாணத்தில் தொற்று குறைந்தபாடாக இல்லை. தற்போது ஏற்ற இறக்கமாக காணப்படுகின்றது என யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

நேற்று முன் தினம் மாலை 4 மணிக்கு பின்னர் கிடைத்த தரவின் அடிப்படையிலே மொத்தமாக 248 நபர்கள் மேலதிகமாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் மொத்தமாக 14,192 பேர் நேற்றுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.

281 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. நேற்று வரை தொற்றாளர்களுடன் தொடர்புகொண்ட 5384 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளன.

மருதங்கேணியில் 3கிராமசேவகர் பிரிவும் வேலணையில் ஒரு கிராமசேவகர் பிரிவுமாக 4 கிராமங்கள் தற்போது முடக்கத்தில் உள்ளன.

தற்போது தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டமானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

60 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி பெறுவதில் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டாது தங்களுக்குரிய தடுப்பூசியைப் போடுவதன் மூலம் இறப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அத்தோடு அடுத்த கட்டமாக 20 வயதுக்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவாக ஆரம்பிக்க எண்ணியுள்ளோம்.

பொது முடக்கத்திலும் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை அனுசரித்து நடந்து கொள்ளாமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. எனவே பொதுமக்கள் தற்போதுள்ள பொது முடக்கத்தை துஷ்பிரயோகம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதன் மூலம் இறப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அவசியமற்று வீதிகளில் நடமாடாது வீடுகளில் இருத்தல் சிறந்ததாகும்” என்றார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021