Home செய்திகள் வவுனியாவில் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று

வவுனியாவில் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று

வவுனியாவில் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று

உலக நாட்டையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. அண்மைய நாட்களில் வவுனியாவில் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று குறித்து மக்கள் தேவையற்ற விதங்களில் வெளியே நடமாடுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. 

வவுனியாவில் விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர்  முன்னெடுத்திருந்தாலும் கூட, மக்கள்  தேவையற்று  வெளியில் நடமாடி வருகிக்னறனர்.

வவுனியா ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவில் கடந்த மாதம் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட நெருங்கிய உறவினர்கள் 30 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா  பரிசோதனையில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்டதாக பிரபல  பல்பொருள் அங்காடி உட்பட 5 வியாபார நிலையங்கள் கடந்த வாரம் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன.

வவுனியா, ஓமந்தை, நொச்சிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் இம்மாதம் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி இடம்பெற்ற கும்பாபிசேக நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட   பரிசோதனையில் 25 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் சில மதுபான கடைகள் இம்மாதம் 17 ஆம் திகதி திறக்கப்பட்டிருந்தது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தையும் மீறி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மதுபான கடைகளின் முன்பாக கூடியதனால் 14 நாட்கள் குறித்த  கடைகள் தனிமைப்படுத்தப்பட்டன.

அதேபோல் வவுனியா மாவட்டத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் மட்டும் 3328 பேருக்கு கொரோனா தொற்றும் 50 பேர் வரை மரணமும் நிகழ்ந்துள்ளது. இம்மாதம் செப்டம்பர் மாதம் இருபதாம் திகதி வரை 2222 பேர் கொரோனா தொற்றாலும் 106 மரணமும் நிகழ்ந்துள்ளது. இதனை மக்கள் கருத்திலெடுத்து உணர்ந்து தம்மை தாமே பாதுகாக்க வேண்டும். இல்லையேல் ஏற்படப்போகும் விபரிதங்கள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

Exit mobile version