யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கற்கோவளம் பகுதிக்கு இன்று (17) விஜயம் செய்திருந்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கும்பலால் மீன்வாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் மற்றும் கடற்றொழிலாளர்கள் மீதான வாள்வெட்டு தாக்குதல் பற்றியும் அமைச்சரின் கவனத்துக்கு ஏற்கனவே கொண்டுவரப்பட்டது.
இந்தநிலையிலேயே அது பற்றி ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக அதிகாரிகள் சகிதம் அவர் இன்று அங்கு சென்றிருந்தார். அதற்கமைய, சட்டவிரோத போதைப்பொருள் பாவனை மற்றும் வாள்வெட்டு தாக்குதல் சம்பவங்கள் என்பவற்றுக்கு நிச்சயம் முடிவு கட்டப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
தீவக பகுதிகளில் காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது.
இனி சட்டத்தின் ஆட்சியே நடக்கும் என்பதை வன்முறை கும்பல்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தின் பிடிக்குள் இருந்து தவறிழைத்தவர்கள் தப்பவே முடியாது என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் குழுவினர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



