உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு-’60 சதவிகித குடும்பங்களின் உணவு வேளைகள் குறைந்துள்ளன’

இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றம் காரணமாக சுமார் 60 வீதமான குடும்பங்களின் உணவு வேளைகள் குறைவடைந்துள்ளதாக சிறுவர் நோய் நிபுணத்துவ நிலையத்தின் தலைவர் பேராசிரியர் புவனி லியனகே தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலைமை காரணமாக போஷாக்கின்மை அதிகரிக்கும் என தாம் அனுமானிப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

“குடும்பமொன்று ஒருவேளை சாப்பாட்டுக்காக உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்துள்ளது. உணவு வேளைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன. மூன்று வேளை உணவுக்காக – இரண்டு வேளை உணவினையே அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர். இந்த வகையில் சுமார் 60 வீதமான குடும்பங்களின் உணவு வேளை குறைந்துள்ளன” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உணவு வகைகளில் போஷாக்கின் அளவு குறைந்துள்ளதாகவும் உணவுகளிலுள்ள புரதத்தின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பேராசிரியர் புவனி லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இவற்றுக்குத் தீர்வு காணத் தவறினால், எதிர்கால சந்ததியினர் பாரதூரமான ஆபத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அண்மையில் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.