Tamil News
Home செய்திகள் பொலநறுவையில் பழமையான சிவாலயங்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் கட்டப்படுகின்றன

பொலநறுவையில் பழமையான சிவாலயங்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் கட்டப்படுகின்றன

பொலநறுவையில் பல பழமையான சிவாலயங்கள் அழிக்கப்பட்டு மறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன் இதனை சில பௌத்த பிக்குகள் இணைந்து முன்னெடுத்துவருவதாக பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழர்களின் பூர்வீக காணிகளையும் அபகரிக்கும் செயற்பாடுகள் மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ து.சத்தியநாதன் சர்மா தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று மாலை பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியத்தினரால் ஊடக சந்திப்புபொன்று நடாத்தப்பட்டது.இந்த ஊடக சந்திப்பில் பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ து.சத்தியநாதன் சர்மா,செயலாளர் சிவஸ்ரீ ரதன் சர்மா ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ து.சத்தியநாதன் சர்மா,பொலநறுவை இந்துக்குருமார் ஒன்றியம் எனது முயற்சியினாலேயே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவந்த நிலையில் அண்மையில் மீண்டும் புதிய நிர்வாக தெரிவின் ஊடாக தலைவராக நான் தெரிவுசெய்யப்பட்டேன்.

நாங்கள் எமது ஒன்றியம் ஊடாக பல்வேறு சமய சமூக பணிகளை முன்னெடுத்துவருகின்றோம்.மத்திய கிழக்கு நாட்டில் உள்ளவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள வளைகுடா வானம்பாடிகள் அமைப்பிடம் கேட்டதற்கு அமைவாக பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பொலநறுவை மாவட்டம் பெரும்பான்மை சிங்கள மக்களைக்கொண்டபோதிலும் வெலிக்கந்தை பிரதேச சபை,திம்புலாகல பிரதேசசபை பகுதிகளில் தமிழ் மக்கள் பரந்துவாழுகின்றனர்.அங்குள்ள மாணவர்களுக்கு சரியான அறநெறிபோதனைகளை வழங்கும் பணிகளை முதல்கட்டமாக முன்னெடுத்தோம்.

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு வளைகுடா வானம்பாடிகள் அமைப்பிடம் கோரியபோது எமக்கு வழங்கப்பட்டது.பொலநறுவை மாவட்டத்தில் எட்டு அறநெறி;ப்பாடாலைகள் உள்ளன.சுமார் 600மாணவர்கள் அங்கு கற்றுவருகின்றனர்.

இதேபோன்று கற்றல் உபகரணங்களுடன் பிள்ளைகளுக:கு உணவுகளை வழங்குவதற்கும் அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். வளைகுடா வானம்பாடிகள் அமைப்பின் செயற்பாடுகள் எங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகயிருந்தது.எங்களுக:கு அந்த அமைப்பு ஊடாக நிறைய விடயங்களை செய்திருந்தார்கள்.

இதேபோன்று இலங்கையில் உள்ள தமிழ் பேசும் அமைப்புகள் பொலநறுவை மாவட்டத்தின் பக்கம் தமது பார்வையினை செலுத்தவேண்டும்.பொலநறுவை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.பழமையான சிவாலயங்கள் மறைக்கப்பட்டுள்ளன.அங்குள்ள மக்களுக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவம் இல்லை.

அனைத்து தமிழ் மக்களுக்கும் நான் சொல்லும் விடயம்.பொலநறுவையில் பல சிவாலயங்கள் உள்ளன.எத்தனையோ சிவாலயங்கள் அனுராதபுரத்திலும் பொலநறுவையிலும் மறைக்கப்பட்டுள்ளன.முத்துக்கல் என்னும் கிராமத்தின் காட்டுப்பகுதியில் சிவாலயம் ஒன்று மறைக்கப்பட்டுள்ளது.அங்கிருந்த சிவலிங்கம் உடைக்கப்பட்டுள்ளது.

அங்கு பல புராதன சின்னங்கள்,எழுத்துக்கள் உள்ளன.அந்த ஆலயங்கள் பௌத்ததேரர்களின் கைவசம் சென்றுள்ளது.அந்த இடத்திற்கு செல்வதற்கு எங்களை அனுமதிப்பதில்லை.அங்கு பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்றுவருகின்றது.தொல்பொருள் ஆராய்ச்சிஎன்ற போர்வையில் புதையல்கள் தோண்டப்படுவதாக தகவல்கள் வருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே பொலநறுவை இந்துக்குருமார் ஒன்றியம் சமய பணிகளில் ஈடுபட்டுவருகின்றது.கிராமம் கிராமமாக சென்று மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்துவருகின்றோம்.பல்வேறு பிரச்சினைகளுடன் மக்கள் வாழுகின்றார்கள்.

வறுமையின் காரணமாக பாடசாலை கல்வியை நிறுத்திய நிலையிலும் மாணவர்கள் இருக்கின்றார்கள்.இவர்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைளை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றோம்.

இந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி எமது ஒன்றியத்தின் கூட்டத்தினை கூட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.பழைய நிர்வாகத்துடன் பல கருத்துமுரண்பாடுகள் இருக்கின்றது.

அவர்களையும் அழைத்து புதிய நிர்வாகத்தினையும் அழைத்து சரியான தீர்வொன்றை எட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.அதற்கான செயற்பாடுகளை செயலாளர் சரியாக முன்னெடுத்திருந்தார்.

அன்றைய தினம் கூட்டத்திற்கு எனக்கும் சரியான நேரத்திற்கு செல்லமுடியவில்லை.எனது கடமையினை முடித்துவிட்டு நான் அங்கு சென்றபோது செயலாளருக்கு பழைய நிர்வாகத்தினரால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.அவர் தாக்கப்பட்டு அவரது பூநூலும் அறுக்கப்பட்டிருந்தது.

அதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.குறித்த தாக்குதல் தொடர்பில் சரியான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவுள்ளது.

Exit mobile version