மன்னார்: நவம்பர் மாதம் மட்டும் 540 பேர் கொரோனாவால் பாதிப்பு -மருத்துவர் ரி.வினோதன்

மன்னார் கொரோனா பாதிப்பு

மன்னார் கொரோனா பாதிப்பு: மன்னாரில் நவம்பர் மாதம்,  25 டெங்கு தொற்றாளர்களும்,540 கொரோனா தொற்றளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் இரு  கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

மாவட்டத்தில் தற்போது வரை 2933 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு தற்போது வரை 28 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது. கடந்த மாதம் உயிரிழந்த ஐவரில் இருவர் எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு தற்போது வரை மொத்தமாக 54 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 25 டெங்கு தொற்றாளர்கள் கடந்த நவம்பர் மாதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே மக்கள் நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் காண்டு அழிப்பதோடு, நுளம்பின் தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாக்கும் வழிமுறைகள் உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும்.காய்ச்சல் ஏற்படும் போது சுய சிகிச்சைகளை செய்து கொள்ளாமல் உடனடியாக வைத்தியசாலைகளுக்கு அல்லது வைத்தியர்களிடம் சென்று தமது பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு குருதி பெருக்கு நோய் அறிகுறி உடைய இருவரும் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சலை தனிப்பதற்காக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பொது மக்கள் எம்.எஸ்.ஏ.ஐ.டி என்ற வகையைச் சேர்ந்த மாத்திரைகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தற்போது சர்வதேச அளவில் கரிசனையை செலுத்தி உள்ள   ‘ஓமிக்ரோன்’  என்கிற வகை திரிவுடைய வைரஸ் இலங்கையிலும் பரவி உள்ளதா என்பதற்கான தொடர் பரிசோதனைகள் மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக வடமாகாணத்தில் மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் பீ.சி.ஆர்.மாதிரிகள் எதிர் வரும் மாதத்தில் சேகரிக்கப்பட்டு ஜயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.டிசம்பர் மாதம் பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடும் சந்தர்ப்பம் உள்ளது.

எனவே பொதுமக்கள் ஒன்று கூடும் நிலமைகளை தவிர்த்து சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும்” என்றார்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad மன்னார்: நவம்பர் மாதம் மட்டும் 540 பேர் கொரோனாவால் பாதிப்பு -மருத்துவர் ரி.வினோதன்