தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வு கிடைக்கும் வரை புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலிட வரமாட்டார்கள்- சுமந்திரன்

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வு

இலங்கையில் தமிழ்த் தேசியப் பிரச்சனைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வு ஒன்று வரும்வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள். புலம்பெயர் அமைப்புகளையும், தனியார்களையும் தடை செய்துவிட்டு அவர்களை வருமாறு அரசாங்கம் அழைப்பதில் அர்த்தமில்லை. ஆகையால் அவர்கள் வருவார்கள் என்று திடீரென பகல் கன காண வேண்டிய அவசியம் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று மாலை மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த  ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களால்  ஜனாதிபதியுடனான சந்திப்பு மற்றும் தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் சில  கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

அதன் முழு வடிவம்,

கேள்வி : ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பு திருப்திகரமானதாக இருந்ததா?

பதில் : திருப்திகரமாக இருந்ததா? இல்லையா? என்பது பற்றி பலர் கேட்டிருக்கின்றார்கள். நான் அதற்குப் பதில் சொல்லவில்லை. முதலாவது கூட்டத்திற்குப் போய் வந்து விட்டு கூட்டம் திருப்திகரமானதாக இருந்ததா, இல்லையா என்று பதில் சொல்ல முடியாது. ஒரு கூட்டத்திற்குச் சென்றிருக்கின்றோம். அதில் சில வாக்குறுதிகள் கொடுத்திருக்;கின்றார்கள். சிலர் கேட்கின்றார்கள் இந்த வாக்குறுதிகளை நம்புகின்றீர்களா என்று இது பொருத்தமற்ற ஒரு கேள்வி. நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவர்கள் வாக்குறுதி வழங்கியிருக்;கிறார்கள். அதனை அவர்கள் நிறைவேற்றுவார்களா என்று பார்ப்போம் அவ்வளவு தான். நாங்கள் நம்பி வாக்குறுதிகளைப் பெறுவதில்லை. ஆனால் வாக்குறுதிகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அதனை நிறைவேற்ற வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கின்றது. நம்பினால் மட்டும் தான் பேச வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். ஒருவரை நம்பிப் பேச வேண்டிய தேவை இல்லை. அதிகாரம் அவர்கள் கையிலே இருக்கும் போது நாங்கள் அவர்களுடன் தான் பேச வேண்டும். நாங்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.

கேள்வி: பல சிக்கல்களில் இருக்கும் இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சவார்த்தைகளில் கலந்து கொண்டது என வடக்கு கிழக்கில் உள்ள சில தமிழ்க் கட்சிகளும், காணாமல் போனோர் சம்மந்தமான அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன. இது தொடர்பில் உங்கள் பார்வை?

பதில் : அவர்கள் எதை வைத்து அவ்வாறு சொல்கின்றார்கள் என்று தெரியவில்லை. அரசாங்கத்தில் இருப்பவர்களுடன் தான் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடாத்த வேண்டும். நீண்டகாலமாக அரசாங்கம் எங்களோடு பேச வேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம். அண்மையில் கூட பாராளுமன்றத்தில் பிரதிநிதித்தவப்படுத்துகின்ற அனைத்துத் தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களும் ஜனாதிபதி எங்களுடன் பேச வரவேண்டும் என்றே ஆர்ப்பாட்டம் செய்தோம். பேசவாருங்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு அவர் பேச்சுவார்த்தைக்குத் திகதி கொடுக்கும் போது பேச மாட்டோம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கின்றது என்று தெரியவில்லை. ஒருவருடன் பேசுவததால் அவரைச் சர்வதேசத்தல தூக்கி நிறுத்துவதாக நான் நினைக்கவில்லை. தற்போது உக்ரேனுக்கும் ரஸ்யாவிற்கும் நடக்கும் பேச்சவார்த்தை ஒருவரை ஒருவர் பாதுகாப்பதற்காக நடக்கும் பேச்சுவார்த்தையா? இல்லையே, எனவே பேச வேண்டிய நேரத்தில் பேசத்தான் வேண்டும்.

கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் டெலோ கட்சி ஏன் வேறொரு நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்?

பதில் : இதற்கு டெலோதான் பதில் சொல்ல வேண்டும் அவர்களிடம் கேட்கும் கேள்வியை என்னிடம் கேட்டால் நான் எவ்வாறு பதில் சொல்ல முடியும். அவர்கள் ஏன் வேறொரு நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

கேள்வி : வடமாகாணத்திலுள்ள மூன்று தீவுகளை உற்பத்தி செயற்பாடொன்றுக்காக இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தமொன்ற கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

பதில் : இதனை நாங்கள் வரவேற்கின்றோம். நாங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கின்றோம். இந்தியத் திட்டங்கள், இந்திய முதலீட்டுத் திட்டங்கள் வடக்கு கிழக்கில் வருவதை நாங்கள் முற்றமுழுதாக வரவேற்கின்றோம். அது எங்களுக்குப் பலமாக இருக்கும். ஆகையினாலே இந்தியாவிற்கு இந்தத் திட்டங்கள் கொடுக்கப்பட்டது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.

கேள்வி : ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது சர்வதேச விசாரணை வேண்டுமென்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட அதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக உள்ளக விசாரணைகளை வலியுறுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வாறாயின் சர்வதேச விசாரணையைக் கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளக விசாரணைக்கு இணங்கிவிட்டதா?

பதில் : உள்ளக விசாரணை என்று நாங்கள் சொல்லவே இல்லை. ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை நீங்கள் பார்த்தீர்களாக இருந்தால், குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும் என்றறு தான் சொல்லியிருக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக சட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்கே நடத்தப்படுகின்ற விசாரணைகளில் சர்வதேச நிபுனர்களும் பங்குபெறாலம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

எனவே அந்த அலுவலகத்தினூடாக நடத்தப்படுகின்ற விசாரணையாக இருக்கலாம் அல்லது வேறு ஒரு பொறிமுறையாக இருக்கலாம் அல்லது இந்த விசாரணை சம்மந்தமாக அவர்களுக்குள்ளேயே இரு நிலைப்பாடு வந்தது நீதியமைச்சர் சொன்னார் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினூடாக விசாரணைகளை மேற்காள்ளலாம் என்று அமைச்சர் பீரிஸ் சொன்னார் தென்னாபிரிக்காவின் உதவியோடு நாங்கள் உண்மை கண்டறியும் பொறிமுறையொன்றை உருவாக்குகின்றோம் அதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று சொன்னார்கள். இந்த இரண்டிலும் சர்வதேச ஈடுபாடு இருக்கின்றது. ஆகையினால் விசாரணை வேண்டும் என்று நாங்கள் கோரியதற்கு அரசாங்கம் அதற்கு இணங்கியமையை வைத்துக் கொண்டு உள்ளக விசாரணைக்காக நாங்கள் கோரிக்கை வைத்தோம் என்று சொல்வது எந்தவிதத்திலும் நியாயமான கூற்று அல்ல.

கேள்வி : இந்தியாவினன் முதலீட்டாளர்களை வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளச் செய்வது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்படடதா? அதிலும் குறிப்பாக புலம்பெயர் முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடுகளை மேற்கொள்ளாமல் இந்தியாவிலுள்ள முதலீட்டாளர்களின் ஊடாக அந்த முதலீடுகளைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் ஏதும் உள்ளனவா?

பதில் : நான் சென்னைக்குச் சென்ற போது தமிழ் நாட்டின் நிதியமைச்சரோடு நீண்ட பேச்சுவார்ததைகளை நடத்தியிருக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக பல முன்னெடுப்புகள் தற்போது நடைபெறுகின்றன. அதிலொன்று தமிழ்நாட்டிலிருந்து வரும் முதலீட்டாளர்கள் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களையும் இணைத்துக் கொண்டு வருகின்ற திட்டமும் இருக்கின்றது. அந்தப் பொறிமுறையொன்றை ஏற்படுத்த நாங்கள் முயல்கின்றோம். அதிலே நேரடியாக இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பாத இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தினர் தமிழ்நாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து வர விரும்பினால் அதற்கான ஒரு வழியையும் நாங்கள் ஏற்படுத்துகின்றோம்.

ஆனால் இது எல்லாவற்றிற்கும் முன்னர் சர்வ கட்சி மாநாட்டிலே இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நான் சொன்ன ஒரே ஒரு விடயம் இந்த நாட்டிலே தமிழ்த் தேசியப் பிரச்சனைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும்வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள் என்பதை நான் சொல்லியிருந்தேன். அதுமட்டுமல்லாது ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இன்னுமொரு விடயத்தையும் நான் கூறியிருந்தேன். புலம்பெயர்ந்த மக்கள் அமைப்புகளையும், தனியார்களையும் தடை செய்தவிட்டு அவர்களை வருமாறு அரசாங்கம் அழைப்பதில் அர்த்தமில்லை. ஆகையால் இந்த விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். அவர்கள் வருவார்கள் என்று திடீரென பகல் கன காண வேண்டிய அவசியம் கிடையாது. அரசியற் தீர்வொன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் தான் அதைப்பற்றி நாங்கள் பேச முடியும்.

கேள்வி : இலங்கை மீது சர்வதேசத்தின் பாரிய அழுத்தம் இருக்கும் இந்த நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் என்ற தொனியை ஏற்படுத்தி தம்மீதான அழுத்தங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஏதும் முன்னெடுக்கப்படுவதாக நீங்கள் சந்தேகிக்கின்றீர்களா?

பதில் : எங்களோடு பேச்சுவார்த்தை நடத்திய காரணத்தினால் நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கவாரங்கள் எல்லாம் மாறப்போவதில்லை. கொடுத்த கடன் குறையப் போவதில்லை. ஆகையால் அதற்கும் இதற்கும் சம்மந்தம் இருப்பததாகத் தெரியவில்லை. அந்தப் பொருளாதார நிலையில் இருந்து மீள்வதற்கு வேறு பல விடயங்களை அரசாங்கம் செய்ய வேண்டியதாக இருக்கின்றத. கடன் கொடுத்த நாடுகளுடன் அமைப்பகளுடன் அந்தக் கடன்களை மீளமைப்பதற்கான முயற்சிகளைத் தான் செய்ய வேண்டுமே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதால் அந்த நிலைமை மாறப்போவதில்லை.

கேள்வி : வடக்கில் சீனாவின் ஆதிக்கம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் ஏதும் தெரிவிக்கப்பட்டதா?

பதில் : அது தொடர்பில் நாங்கள் விசேடமாகத் தெரிவித்தோம். நாங்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் இனப்பரம்பலை மாற்றுவதற்கான முயற்சிதான் இது என்று உதாரணங்களுடன் சுட்டிக் காட்டினோம். அந்த விடயங்களை நிறுத்துவதற்கும் உறுதியளித்திருக்கின்றார்கள்.

கேள்வி : அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் செயலணி மற்றும் மயிலத்தமடு, மாதவணை போன்ற பிரச்சனைகள் விஸ்வரூபமாக இருந்து வருகின்றன இது தொடர்பில் ஜனாதிபதியிடம் ஏதும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டனவா?

பதில்: அவை சம்மந்தமாகவும் பேசினோம். மயிலத்தமடு, மாதவணை விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மிக விவரமாக எடுத்துச் சொன்னார். அத்துடன் தென்னைமரவாடியில் மக்களை பயிர் செய்யவிடாமல் தடுப்பது தொடர்பிலும் எடுத்துச் சொன்னோம். அதன்போது ஒரு உத்தரவு கொடுக்கப்பட்டது. நீண்டகாலமாக பயிர்ச்செய்யும் இடத்தை எந்தத் திணைக்களமும் தடுக்கக் கூடாது. பிரதேச செயலாளரின் அத்தாட்சி கொடுக்கும்பட்சத்தில் அந்த நடவடிக்கையை எந்தத் திணைக்களமும் தடுக்கக் கூடாது என்ற உத்தரவு பிறப்பிப்பதாகச் சொல்லியிருக்கின்றார்.

ஜனாதிபதியால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைத் தான் நான் சொல்லுகின்றேனே தவிர அது நான் கொடுக்கின்ற வாக்குறுதி அல்ல. பலர் அதனைத் தவறாகப் புரிந்து கொள்வார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது என்று. அவ்வாறல்ல ஜனாதிபதி எங்களிடம் சொன்னதை நாங்கள் அவ்வாறே ஒப்புவிக்கின்றோம் அவ்வளவுதான். ஜனாதிபதி சொன்ன விடயங்களைச் செய்விக்க வேண்டிய பொறுப்பும் இருக்கின்றது. அந்த நடவடிக்கைகளில் அடுத்ததாக நாங்கள் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.

Tamil News