Home Blog Page 1883

அதிகரித்து வரும் இழப்புகள்;அநாதரவாய் மக்கள்- கிருஷ்னா

கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகளில் பெரும் வேதனைகளையும் சோதனைகளையும் சுமந்த மக்களாக உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேச மக்கள் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் யானைகளின் தாக்குதலிலும் இழப்புகளை எதிர் நோக்குகின்றனர்.

போரதீவுப் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் ஏனையவர்களைப் போல் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. என்றாலும் தானும் தனது குடும்பமும் என அன்றாடம் உழைத்தே வாழ்நாளைக் கடத்துகின்றனர்.

பல்வேறு வளங்களைக் கொண்டிருந்தாலும், வேளாண்மைச் செய்கைக்கு பெயர்போன இந்தப் பிரதேசம் வரலாறு காணாத பேரழிவுகளை சந்தித்திருக்கின்றது. இவற்றை எல்லாம் கடந்து தற்போதைய சூழ்நிலையில் காட்டு யானைகளின் அட்டகாசங்களும் அழிவுகளும் இவர்களை விட்டபாடில்லை.

எல்லையோரக் கிராமங்களான பாலையடிவட்டை, காக்காச்சிவட்டை, நெல்லிக்காடு 35ஆம், 37ஆம், 38ஆம், 39ஆம், 40ஆம் கிராமங்கள், விவேகானந்தபுரம், திக்கோடை, தும்பங்கேணி, இளைஞர் விவசாயத் திட்டம், களுமுந்தன்வெளி புன்னக்குளம், இறாணமடு போன்ற கிராமங்களிலேயே யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

யுத்த காலத்தில் எதுவித யானைப் பிரச்சினையையும் எதிர் கொள்ளாத இப்பகுதிகள் யுத்தம் முடிவடைந்த காலப் பகுதியில் இருந்து தொடர்ச்சியான யானை பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.

போரதீவுபற்று பிரதேச செயலகப் பகுதிகளில் யானையின் தாக்குதல்கள் காரணமாக சுமார் 1000ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 15ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன்  20ற்கும் மேற்பட்டவர்கள் தமது அவயங்களை இழந்துள்ளனர்.IMG 3343 அதிகரித்து வரும் இழப்புகள்;அநாதரவாய் மக்கள்- கிருஷ்னா

போரதீவுபற்று பிரதேசத்தில் 43 கிராமசேவையாளார் பிரிவுகளில் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். விவசாயத்தினையும் கால்நடை வளர்ப்புகளையும் பிரதான தொழிலாகக் கொண்டுள்ள இங்குள்ள மக்கள், வீட்டுத் தோட்டம், கைத்தொழில், கோழி வளர்ப்பு, செங்கல் அரிதல், கூலிவேலை செய்தல் போன்ற இதர தொழில்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐப்பசி தொடக்கம் மாசி மாதம் வரையான காலப் பகுதிகளில் பெரும்போக வேளாண்மைச் செய்கை, தோட்டச் செய்கை என்பனவற்றை பரந்த அளவிலும் , சித்திரை தொடக்கம் ஆடி மாத காலப் பகுதிகளில் சிறுபோக வேளாண்மைச் செய்கையை குறைந்த அளவிலும் இந்தப் பிரதேச மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மேற்கொள்ளும்  அவர்களின் வாழ்வாதாரத்திற்கு காட்டு யானைகளால் தற்போது பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இங்குள்ள சிங்கள பகுதிகளில் யானைகளின் பிரச்சினைகளினால் அப்பகுதி சிங்கள மக்கள் பாதிக்கப்படாத நிலையில், தமிழ் பகுதிகளே யானையின் தாக்குதல்களினால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் 35ஆம் கிராமத்தினைச் சேர்ந்த ஆலய பரிபாலன சபையின் செயலாளர் ரஞ்சன் என்பவர் இவ்வாறு கூறுகின்றார்.

“நாங்கள் எமது கிராமத்திலிருந்து சுமார் 10 தடவைகளுக்கு மேல் இடம் பெயர்ந்து பற்பல இடங்களில் வாழ்ந்து இறுதியாக கடந்த 2007ஆம் ஆண்டு மீளக் குடியமர்ந்துள்ளோம். பெருமளவிலான உயிர், உடமை இழப்புகளை எதிர் கொண்டுள்ளோம். தற்போது நாம் காட்டு யானைகளால் அவ்வாறான இழப்புகளை சந்தித்து வருகிறோம்.IMG 1594 அதிகரித்து வரும் இழப்புகள்;அநாதரவாய் மக்கள்- கிருஷ்னா

இதுவரை எமது பகுதியில்  12 நபர்களை காட்டு யானைகள் அடித்துக் கொன்று இருக்கின்றன. 50இற்கு மேற்பட்ட வீடுகள் யானைகளினால் முற்றாக உடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலமை தொடருமாக இருந்தால், நாங்கள் யுத்த காலத்தில் எவ்வாறு இடம் பெயர்ந்தோமோ அது போல் காட்டு யானகளுக்கும் பயந்து இடம் பெயர வேண்டிய  நிலை  ஏற்படும்” என தனது மன ஆதங்கத்தை மிகவும் தெளிவாக  எடுத்துரைத்தார்.

அப்பகுதியைச் சேர்ந்த கோ.பிரசாத் இவ்வாறு கூறுகின்றார்.

“நாங்கள் தற்போது யானைகளின் அட்டகாசத்தினால் படும் பாடுகளைப் பற்றி பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தலைவர், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வனஜீவராசிகள் திணைக்களம், அரசாங்க அதிபர் போன்ற பலருக்கும் அறிவித்தும் எமக்குரிய பயன் இதுவரை  கிட்டவில்லை.

நாங்கள் கோருவது யானைகள் கிராமத்திற்குள் உட்புகும் மையப் பகுதிகளைச் சுற்றி மின் வேலிகள் அமைத்துத் தர வேண்டும் என்பதுவேயாகும். ஆனால் வனஜீவராசிகள் திணைக்களம் இங்கு வந்து எம்மிடம் நான்கு ஜந்து யானை வெடிகளைத் தந்து விட்டுச் செல்கின்றார்கள். இவவற்றை நாங்கள் பயன்படுத்தினாலும் யானைகள்   எந்த பிரதிபலிப்பையும் காட்டுவதில்லை.  இவற்றால் எந்த பயனுமில்லை.

இது இவ்வாறிருக்க, இப்பிரதேசம் வேளாண்மைச் செய்கைக்குப் பெயர் போனது. இங்குள்ளவர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர் மரக்கறி தோட்டங்கள், வாழைத் தோட்டங்கள், தென்னைகள் என்பனவும் நெல் வயல்களும் மட்டுமன்றி விவசாயிகள் சேமித்து வைக்கும் நெல் மூட்டைகளையும் கூட யானைகள் அழித்து வருகின்றன.IMG 1275 அதிகரித்து வரும் இழப்புகள்;அநாதரவாய் மக்கள்- கிருஷ்னா

காட்டு யானைகளின்  தாக்குதல்களை இன்று ஏந்திக் கொண்டு நிற்கும் போரதீவுப் பற்றுப் பிரதேச மக்கள் கடந்த காலங்களில் பெரிய வெள்ளம் அதனைத் தொடர்து சூறாவளி பின் யுத்தம் இவைகளனைத்திற்கும் முகம் கொடுத்து தற்பொழுது மெல்லமெல்ல மீண்டெழுந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், “மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல” தற்பொழுது யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களின் உயிர்களையும், உடமைகளையும், குடியிருக்கும் வீடுகளையும் அழித்து வருவது மிகவும் வேதனையான விடயமே.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு 12 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அதே காலப் பகுதியில் 10 யானைகளும் இறந்துள்ளன எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள மாவட்டப் பணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன என சுட்டிக்காட்டிய அவர், 2019ஆம் ஆண்டு யானைகளால் தாக்கப்பட்டு 10பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், இவ்வாண்டு முதல் மாதத்தில் இருவர் யானைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.elephent அதிகரித்து வரும் இழப்புகள்;அநாதரவாய் மக்கள்- கிருஷ்னா

குறித்த மனித – யானை மோதலைத் தடுக்கும் பொருட்டு, யானைகள் வரும் வீதிகளில் மின்விளக்குகள் பொருத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். யானை வேலிகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன் பெரும்பாலான பகுதிகளுக்கு அமைக்கப் பட்டுள்ளதாகவும், மிகுதி பகுதிகளுக்கும் இந்த ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எது எப்படி இருப்பினும் இந்த அழிவு நடவடிக்கைகளை தடுப்பதற்கு உரிய கதியில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றே மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது சாமானிய மக்களின் உயிர் பிரச்சனை. அவர்களின் வாழ்வாதரப் பிரச்சனை. வனவிலங்குகளின் வாழ்வுக்கான பிரச்சனையும் கூட. எனவே உரிய அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக அக்கறை கொண்டோர் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை உடன் முன்னெடுப்பது அவசியம்.

 

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நினைவுகள்…

தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் தமிழ்மக்களுக்கு மிகவும் அறிமுகமான ஊடகர் சத்தியமூர்த்தியின் நினைவுநாள்…..இந்தநாளில் அவர் எம்மோடு வாழ்ந்த நினைவுகள் முன்னெழுகின்றன…

அழிக்கமுடியாத அந்த நினைவுகள் எம்மை என்றும் வருத்துவனவாக இருக்கும் நிலையில் அவர்பற்றி பதிவிடுவது அவசியமாகிறது. எங்களுடன் சேர்ந்து அன்பும் அரவணைப்புமாக வாழ்ந்து…அன்பை விதைத்துவிட்டு எறிகணையின் தாக்குதலில் சத்தமின்றி உயிர்பிரிந்துவிட்ட அவரின் நினைவுகள் எம்முள் மெலெழுகின்றன.

சத்தியமூர்த்தி என்றவுடன் ஆங்கிலமும் தமிழும் கலந்த அந்த பேச்சு….வியர்வையை துடைத்தபடியே சிரிக்கும் அந்த சிரிப்பு…….எப்போதும் துருவித்துருவி கேட்கும் ஊடகனுக்கேயுரிய இயல்பு… எவ்வளவு நெருக்கமான நட்பெனினும் தன்கருத்தை விட்டுக்கொடுக்காமல் விவாதிக்கும் நுண்ணறிவு…..என எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

சத்தியமூர்த்தி ஊடகத்துறையின் சொத்து என்றால் மிகையல்ல. ஊடகத்துறையில் நிறைய சாதிக்கவேண்டிய வயதில் காலம் அவரைப்பிரித்துவிட்ட சோகம் இன்னமும் எம்மை வருத்தியபடிதான் உள்ளது.

1972 இல் யாழ்மாவட்டதில் இணுவில் எனும் ஊரில் பிறந்தவர். தாத்தா, அம்மம்மாவின் அரவணைப்பில் மண்டைதீவில் வாழ்ந்து, மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் தரம் ஐந்தாம் வகுப்புவரை கல்விகற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ். இந்துக்கல்லூரிக்கு சென்று படித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்தே எழுதும் பணியில் ஆர்வமுற்றிருந்தவர் சத்தியமூர்த்தி. விளையும் பயிரை முளையிற் தெரியும் என்ற முதுமொழிக்கிணங்க சிறுவயதிலேயே இனங்காணப்பட்டவர். வாசிப்பதில் சிறுவயதில் இருந்தே ஈடுபாடு கொண்டிருந்தவர்.

1995இல் சிறிலங்கா இராணுவபடையெடுப்பின் காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு இடம் பெயர்ந்த பின் வன்னியில் கால்பதித்து ஊடகங்களில் பல்வேறு எழுத்துப்பக்கங்களில் பங்களித்து தன்திறமையினை வெளிக்காட்டினார். ஆரம்பத்தில் ஈழநாடு பத்திரிகையிலும், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதாரம் சஞ்சிகையிலும் இவரது திறமைகள் பல்வேறு விதமாக வெளிவந்தன.sathiyamoorthi ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நினைவுகள்...

தொடர்ந்து தன்னுடைய நற்பண்புகளாலும் இன்முகத்தினாலும் ஊடகஅறிமுகங்களை பெற்று அவர் அதன் மூலமும் ஊடகச் செயற்பாட்டில் முனைப்பு பெற்று முன்னேறினார். வன்னியில் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதனை ஆலோசகராக கொண்டு செயற்பட்ட ‘எழுகலை இலக்கியப் பேரவையில்’ முக்கிய இடம் வகித்தார். பேரவையின் செயற்பாடுகளுக்கு ஏனைய நண்பர்களுடன் இணைந்து பாடுபட்டார். இளம் படைப்பாளர்களினதும், ஆர்வலர்களினதும் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று அந்த அமைப்பின் வளர்ச்சியில் முக்கியத்துவம் பெற்றார்.

வன்னிமண்ணில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட சத்தியமூர்த்தி வெளிச்சம் கலை இலக்கிய சஞ்சிகை, மற்றும் ஈழநாடு, ஈழநாதம் உட்பட்ட ஊடகங்களில் தன்னுடைய கதைகளை கட்டுரைகளை விமர்சனங்களை எழுதிவந்தார். அதேவேளை அரசசுகாதார திணைக்களத்திலும் அவருக்கான பணி அமைந்தது.

ஆனால் அவரின் ஆர்வமும் ஈடுபாடும் ஊடகப் பணியிலேயே இருந்தன. அவரிடம் காணப்பட்ட திறமையும் ஆர்வமும் அவரை புலம் பெயர்நாட்டு மக்களுக்கான செய்தியாளனாக்கியது. புலத்து மக்களுக்காக ரீ.ரீ.என், தரிசனம் தொலைக்காட்சிகளுக்கான நாளாந்த செய்திப்பார்வைத் தொகுப்பு, அரசியல் கலந்துரையாடல்கள், உள்ளுர் நடப்புக்கள் உட்பட்ட நிகழ்ச்சிகளை அவர் செய்தார். தனது செய்திமுறையில் தனக்கென தனிமுத்திரை பதித்து, அதனூடாக சத்தியமூர்த்தி உலகத்தமிழர்களின் விருப்பத்துக்குரிய செய்தியாளராக தன்னை தகவமைத்துக்கொண்டார். குறிப்பாக பரிஸ் ஈழமுரசு, எரிமலை சஞ்சிகை, கனடாவின் உலகத்தமிழர் பத்திரிகை உட்பட்ட பல ஊடகங்களில் இவரது பல்வேறு படைப்புக்கள் இடம்பெற்றிருந்தன. அவரது அறிவும் ஆளுமையும் புலம்பெயர் ஊடகங்களையும் அழகுசெய்தன.

கிளிநொச்சியில் இயங்கிய தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் தோற்றம் முதல் அதன் செயற்பாட்டுக் காலம் வரையில் பங்களிப்பு செய்ததில் சத்தியமூர்த்திக்கு மனநிறைவு இருந்தது. எப்போதும் ஒரு செய்தியாளனுக்குரிய துடிப்போடும் சிந்தனையோடும் காலத்தை நகர்த்தியவர்…தன்னுடைய மிதிவண்டியில் எப்போதும் திரிந்து செய்தியை சேகரித்தவர். ஊடகப்பணியை தவிர எதுவும் நினைத்ததுகூட இல்லை. சிறந்த நேர்மையான விமர்சகன்….

மூத்தோரையும் இளையோரையும் ஒன்றாக அரவணைத்துச் செல்லும் கலையில் கைதேர்ந்தவர்….தன்னுடைய கருத்தை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தும் கெட்டித்தனம் கொண்ட சத்தியமூர்த்தி தத்துவார்த்தரீதியாக வாதாடும் திறமைகொண்டவர்.

திட்டமிட்டவகையில் சிறிலங்கா அரசினால் தமிழ்மக்கள்மீதான போர் முடுக்கிவிடப்பட்ட நாட்களில் போகுமிடம் தெரியாமல் அலைந்துகொண்டிருந்த மக்கள் கூட்டத்தினரிடையே அவரும் தன் குடும்பத்தினருடன் அலைந்தார். தன் மிதிவண்டியில் மகளையும் அத்தியாவசிய பொருட்களையும் சுமந்தபடி சென்றார்.

கிளிநொச்சி முதல் உடையார்கட்டு ஈறாக நாளும் பொழுதுமாய் எம்முடன் இடம் பெயர்ந்துதிரிந்த அவர் 12.02.2009 அன்று தேவிபுரம் பகுதியில் அவருக்கெனக் காத்திருந்ததுபோல….எங்கோ வெடித்த எறிகணையின் சிதறிய இரும்புத்துண்டு ஒன்று அவரை சாய்த்தது. ஒரேமூச்சில் அவரது உயிர்பிரிந்தது….sathy anna ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நினைவுகள்...

நாட்டை நேசித்து…செய்தியாளனாக வாழ்ந்த சத்தியமூர்த்தி தமிழ் மக்களுக்கு அன்றொரு செய்தியானார்….காலம் அவரை கணக்கில்லாமல் கவர்ந்துகொண்டது.

தன் பெண்குழந்தை பற்றி சத்தியமூர்த்தி பல கனவுகளைக்கொண்டிருந்தார். பனிபொழியும் அதி காலையில் ஆஸ்மா நோயையும் பொருட்படுத்தாது….”கைவீசம்மா கைவீசு….” என்று மகளுக்கு பாட்டுப்பாடி ஊஞ்சலாட்டும் அன்புத்தந்தையாகவும் மகளுக்கு அறிவுசார் புத்தகங்களையே பரிசளிக்கவேண்டும் என ஆசைப்பட்ட ஒரு தந்தையாகவும் விளங்கியவர்.

சத்தியமூர்த்தியின் கனவுகளை சுமந்த அவரது மகள் சிந்து….இன்று 13 வயதுப்பிள்ளையாய் எம்முன் வளர்ந்து நிற்கிறாள். அதே சாயலுடன். எங்களை காணும்போதெல்லாம் தன் தந்தையைப்பற்றி கேட்பதுடன் அவர் குறித்த பழைய நினைவுகளையும் மீட்டிக்கொள்வாள்.

போர்க்கொடூரத்தில் தந்தையை இழந்த பல ஆயிரக்கணக்கான குழந்தைகளில் அவளும் ஒருத்தி. அப்பாவைப்போலவே அனைவரிடமும் அன்புகாட்டுவதில் ஆர்வமாயிருக்கின்றாள் சிந்து.

‘சத்தியமூர்த்தியின் நினைவுடன்…’ – ஆதிலட்சுமி

இலங்கையில் இன்று 5.4 ரிக்டர் அளவில் நிலடடுக்கம்.!

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாலை 2 மணியளவில் இந்த நிலநடுக்கம்சி உணரப்பட்டுள்ளது. கொழும்பிலும் சுமார் 3 செக்கன்களுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர, குடுகலஹேன மற்றும் தெய்யன்தர பிரதேசத்திலும் அம்பலன்கொட பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று காலை 2.33 மணியளவில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சில நொடிகள் இந்த அதிர்வு உணரப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக காலி மாவட்டத்தின் மெதகீம்பிய பிரதேசத்திலும் இவ்வாறான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

எனினும் எவ்வித சேதங்களும் ஆபத்துக்களும் பதிவாகாமையினால் பொது மக்களை அச்சமடைய வேண்டாம். இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாதி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்கு திசையின் இந்து சமுத்திரத்தில் இன்று அதிகாலை 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து 240 கிலோமீற்றர்ருக்கு தொலைவில், தென்கிழக்கு கடற்பிராந்தியந்தில் நில அதிர்வு பதிவாகியதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது​.

பாராளுமன்ற தேர்தலில் வன்னியில் ஜி.ரி, லிங்கநாதன் போட்டி!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பிளட்டின் வன்னிமாவட்ட வேட்பாளர்களாக முன்னாள்மாகாணசபை உறுப்பினர் ஜி,ரி.லிங்கநாதனும், முல்லைத்தீவு வித்தியானந்தா பாடசாலையின் முன்னாள் அதிபர் கந்தையா சிவலிங்கமும் நிறுத்தப்படவுள்ளதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.

வன்னிமாவட்டத்தில் முல்லைதீவு மற்றும் வவுனியாவில் எமது கட்சி சார்பில் இரு வேட்பாளர்களை களம் இறக்கவுள்ளோம். இன்னும் ஓரிரு வாரங்களில் அந்தந்த மாவட்டகுழு திர்மானித்து அந்த வேட்பாளர்கள் யார் என்பதை இறுதி செய்து அறிவிப்போம்.என பிளட்டின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அண்மையில் வவுனியாவில் வைத்து தெரிவித்திருந்தார்.

அதற்கமைய முன்னாள் வவுனியா நகரபிதாவும், வடமாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், மற்றும் முல்லைத்தீவு வித்தியானந்தா பாடசாலையின் முன்னாள் அதிபரும் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசனின் சகோதரருமான க.சிவலிங்கம் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்துவதாக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதுடன், விரைவில் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரவிக்கின்றன.

ஈழத்து மாணவனின் சாதனை சர்வதேச ரீதியில் குவியும் பாராட்டுக்கள்

யாழ் இந்துக் கல்லூரி மாணவன் சர்வதேச ரீதியில் சாதனை படைத்து யாழிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

யாழ் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் நித்தியானந்தன் மாதவன் சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட Google Code-In 2019 போட்டியில் Grand Prize Winner பட்டத்தை வென்றுள்ளார்.

இவருக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் ஜூன் மாதம் கலிபோர்னியாவில் உள்ள Google தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

uuu ஈழத்து மாணவனின் சாதனை சர்வதேச ரீதியில் குவியும் பாராட்டுக்கள்

விக்கியின் கூட்டணியால் கூட்டமைப்புக்கும் முன்னணிக்கும் தலையிடி: சுரேஷ்

மாற்று அணி உருவாக்கத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தலைவலியைச் சந்தித்துள்ளன என ஈ.பி.ஆர். எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் -கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் வழங்கிய ஆணைகளில் இருந்து விலகி, வேறு வழியில் தடம்மாறி சென்றதன் காரணமாகவே, புதிய கூட்டணி உருவாகியது. புதிய கூட்டணி மூலம், தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் களம் அமைத்துள்ளோம்” என்றார்.

விக்கியின் கூட்டணிக்கும், கூட்டமைப்புக்கும் வித்தியாசம் இல்லை: கஜேந்திரகுமார்

“வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிஎன்ற பெயரில்உருவாக்கப்பட்டுள்ளபுதிய கூட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்­­ “பி” அணி. கூட்டமைப்புக்கும் இந்தக் கூட்டணிக்கும் கொள்கையில் வித்தியாசமில்லை. தமிழ் மக்களின் உண்மையான நேர்மையான-தலைமைத்துவமாக எங்கள் தலைமைத்துவம் வந்துவிடக்கூடாதென்பதற்காகவே இந்தப் புதிய கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது.”

இப்படித்தெரிவித்திருக்கின்றார்தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். யாழ்ப்பாணத்தில் உள்ள அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நேற்றுத் தாம் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கை யில் –

“நான்கு நபர்கள் கூடி,நான்கு கட்சிகள் கூட்டுச் சேர்ந்தன எனச் செய்திகள் வெளிவந்து இருக்கின்றன. எம்மைப் பொறுத்த வரை அது நான்கோ, பத்தோ, பதினைந்தோ என்பதல்ல, உண்மையில் எந்த அடிப்படையில் அரசியல் ரீதியாகச் செயற்படுகின்றனர் என்பதே முக்கியமானது.

நாம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – கூட்டமைப்பில் இருந்து விலகிய நாளில் இருந்து நாங்கள் கொள்கை ரீதியாக அந்தக் கூட்டமைப்பு பிழை விடுகிறது, ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குகின்ற அளவுக்கு விலை போயிருக்கிறது என்ற குற்றச்சாட்டைப் பத்து வருடங்களாக முன்வைத்து வருகின்றோம்.

அந்த அடிப்படையில் ஒரு புதிய தலைமைத்துவம் – நேர்மையான தலைமைத்துவம் அவசியமென்ற வகையில் இந்தப் பத்து வருடங்களாக இயங்கிவந்த நிலையில் இன்று இரண்டாம் பெரும் கட்சியாக வடக்குகிழக்கில் இருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு நிலைமை இருக்கையில் எங்கள் வளர்ச்சியைத் தடுப்பதற்காக கொள்கை ரீதியாக எந்தவிதமான-அதாவது கூட்டமைப்பிலிருந்து எந்தவிதமான- வித்தியாசமும் இல்லாமல் இன்னுமொரு மாற்று அமைப்பு என்று கூறிக் கொண்டு ஒரு சிலர் ஒன்று சேர்ந்து இந்தத் தேர்தலில் எங்களுக்கு வரக் கூடிய அங்கீகாரத்தை ஏதோவொரு வகையில் குழப்புவதற்குச் செயற்பட முயற்சிக்கின்றார்கள். அந்த வகையில் தான் இந்தப் புதிய கூட்டு முயற்சிகளை பார்க்கின்றோம்.

எம்மைப் பொறுத்தவரை இன்றைக்கு நேர்மையான அரசியலை – கொள்கை சார்ந்த அரசியலைக் கொண்டு போகக் கூடிய ஒரே ஒரு தரப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். இந்த முன்னணியுடன் இணைந்து செயற்படுகின்ற சிவில் சமூகம், புத்திஜீவிகள் இந்த இனத்துக்குத் தலைமை தாங்கக் கூடாது என்ற சிந்தனையில் பலரும் செயற்படுகின்றனர். ஏனென்றால் எங்கள் தரப்பினர்கள் நேர்மையானவர்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்ற சிந்தனை அவர்களுக்கு இருக்கின்றதென்றால் தமிழ் மக்களை எவருமே தங்களின் தேவைக்காகப் பாவித்து நடுத்தெருவில் விட முடியாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடாக இருப்பதே காரணமாக அமைகின்றது.

தமிழ் மக்கள் ஒரு புதிய தலைமைத்தவத்தைத் தேடிக் கொண்டிருக்கின்ற நிலைமையில் -அந்தப் புதிய தலைமைத்துவம் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் – முன்னணி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெறக்கூடாதென்பதற்காக எங்களிடம் வரக்கூடிய மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏதோ வொரு வகையில் உடைப் பதற்குவாக்குப் பலத்தைக் குறைப்பதற்கு எடுக்கின்ற ஒரு முயற்சியாகத்தான் நாங்கள் இதைப் பார்க்கின்றோம். எல்லாவற்றையும் தாண்டி தமிழ்த் தேசியமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்தக் கூட்டணி நிச்சயமாக எங்களது வாக்கு வங்கியை சரிக்காது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கூட எங்கள் வாக்கு வங்கியைக் கடைசிநேரத்தில் சரிப்பதற்காக இந்தியாவின் ஆதரவோடு இன்னொரு கூட்டு என்ற பெயரில் சுரேஷ் பிறேமச்சந்திரனும் ஆனந்தசங்கரி போன்றவர்களும் கூட்டச் சேர்ந்துத் தாங்கள்தான் உண்மையான மாற்று என்று சொல்லித் தேர்தலில் போட்டியிட்டார்கள். அந்த நேரத்தில் விக்னேஸ்வரனும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம். அப்படியிருக்கவும் அந்தக்கூட்டுக்கு மக்கள் எந்தவித அங்கீகாரத்தையும் கொடுக்கவில்லை. மாறாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குத்தான் அங்கீகாரத்தைக் கொடுத்திருந்தனர்.

அன்றைக்கு கூட எங்களுக்கு எதிராக முன்வைத்த விமர்சனம் என்னவென்றால் நாங்கள் ஒரு தனிப்போக்கு என்றும், நாங்கள் யாருடனும் கூட்டுச் சேர விருப்பமில்லை, ஒரு நாளும் மக்களால் அங்கீகரிக்கக் கூடிய தரப்பு இல்லை என்ற வகையில்தான் அனைத்துத் தரப்புக்களும் எங்களை விமர்சித்தார்கள். ஆனால் மக்கள் அப்படிப் பார்க்கவில்லை. மக்கள் மிகத் தெளிவாக எங்களுக்குத்தான் புதிய தலைமைத்துவம் என்ற விடயத்தில் விருப்பத்தை தெரிவித்திருக்கின்றார்கள். அதில் அறுதிப் பெரும்பான்மையை ஈட்டி சபைகளைக் கைப்பற்றாவிட்டாலும் ஊழலுக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறோம்.நேர்மையான கலாசாரத்தை வெளிப்படுத்தி வருகின்றோம் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

வரப் போகின்ற தேர்தல் ஒரு நாடாளுமன்ற தேர்தலாக இருக்கிறது. ஒட்டுமொத்த தலைமைத்துவத்தை தீர்மானிக்கின்ற ஒரு தேர்தலாக பார்க்கப்படுகின்ற போது தமிழ் மக்கள் எங்களுக்கான அங்கீகாரத்தை நிச்சயம் கொடுப்பார்கள் என்று தான் நம்பு கின்றோம். கடந்த உள்ளுராட்சித் தேர்தலையும் விட பல மடங்கு மேலாக நாங்கள் பலப்பட்டு நிச்சயமாக தனிப்பெரும் கட்சி என்பதை இந்தத் தேர்தலில் நாங்கள் நிரூபித்துக் காட்டுவோம்” என்றார்.

சஜித் தலைமையிலான கூட்டணியை பதிவு செய்ய வேண்டாம்: ஐ.தே.க. கோரிக்கை

சஜித் பிரேமதாஸ தலைமையில் அமையவுள்ள அரசியல் கூட்டணியான சமகி ஜாதிக்க பலவேகய என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது United National Power என்று வருவதால் அது யு.என்.பி. என்று அர்த்தப்படுவதாகவும் இதனால் யு.என்.பி. என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தனித்துவத்திற்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டச் செயலாளர் இதனை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளமையுடன் – இதன் காரணமாக சம்பந்தப்பட்ட கூட்டணியை இவ்வாறு பதிவு செய்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுள்ளார்.

மஹிந்த உண்மையை அறிந்து பேச வேண்டியது முக்கியம் – சி.வி.விக்னேஸ்வரன்

தான் முதலமைச்சராக இருந்த காலத்தில் வட மாகாணத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மீள அனுப்பப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் சென்று கூறியிருப்பது விந்தையான செயல் என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் மேற்படி கருத்துக்கு பதிலளித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு இன்று (11) அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தனது தலைமையிலான வட மாகாண சபையின் ஆயூட்காலம் முடிந்த பின்னரும் மத்திய அரசாங்கத்தால் வட மாகாணத்திற்கு வழங்க வேண்டிய ஒரு தொகை நிதி இதுவரை நிலுவையில் உள்ளதாகவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் பிறநாடுகளில் கருத்து தெரிவிக்கும் போது உண்மையை அறிந்து பேச வேண்டியது முக்கியம் எனவும் இலங்கையின் அரசியல் மேடைகளில் பேசுவது போல் பேசக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கம் தமக்கென ஒரு பிரத்தியேக அதிகாரப் பகிர்வை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டியது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி பலியானவர்களின் எண்ணிக்கை 1000ஐயும் தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

கொரோனா காரணமாக சீனாவில் தொடர்ந்து பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. மொத்தம் 22 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் இந்த வைரசை கட்டுப்படுத்தத் தவறியதால் மக்கள் அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த வைரசிற்கு எதிராக சீன அரசு தோல்வியடைந்து விட்டது என்றுதான் கூறவேண்டும். அவர்கள் மற்ற உலக நாடுகளிடம் உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவிடமும், இந்தியாவிடமும் ஏற்கனவே சீன அதிபர் ஜி ஜிங்பிங் உதவி கேட்டு விட்டார்.

டிசம்பர் மாத இறுதியிலேயே இந்த வைரசின் தாக்குதல் குறித்து அந்நாட்டு அரசிற்குத் தெரிந்திருந்தது. ஆனால் அந்த விடயத்தை வெளியே தெரிவிக்காமல் அரசு மறைத்து விட்டது. இதனால் அந்நாட்டு அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். சமூகவலைத்தளங்களில் இந்த அரசை கவிழ்க்க வேண்டும், உடனடியாக அரசை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றார்கள். நாளுக்கு நாள் அரசிற்கு எதிராக அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1016ஐ எட்டியுள்ளது. 1000 பேருக்கு அதிகமாக பலியானது அந்த நாட்டையே உலுக்கியுள்ளது. நேற்று (10) மட்டும் 104பேர் பலியானார்கள். இதனால் அந்நாட்டு அரசு பெரியளவில் அதிர்ச்சியடைந்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 2146 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 42638பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது குிறப்பிடத்தக்கது.

முன்பு வுஹன் நகரத்தில் தான் இந்த வைரஸ் அதிகமாகப் பரவியது. இதனால் அந்நகரம் மொத்தமாக மூடப்பட்டது. ஆனால் தற்போது ஹுபே நகரத்தில் இந்த வைரஸ் வேகமாகப் பரவி பரவி வருகின்றது. நேற்று மட்டும் இந்த வைரஸ் தாக்கத்தினால் ஹுபே நகரத்தில் 92பேர் பலியாகியுள்ளனர். அந்த நகரத்தையே இந்த வைரஸ் முடக்கிப் போட்டுள்ளது.