நடைமுறையில் உள்ள பாரத் சிறிலங்கா கூட்டாண்மையின் ஒன்றிணைந்த எதிர்காலப் பகிர்வுக்கான பங்காண்மை வளர்ப்புக்காக (Fostering Partnership for a Shared Future) ஏற்கனவே ஒன்றுசேர்ந்து செயற்பட இணங்கியன குறித்த மதிப்யாய்வுக்கான வருகையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளரும் இந்திய வெளிவிவகார அமைச்சரும் மற்றும் இந்திய உயர் அதிகாரிகள் குழுவும் ஏப்ரல் 4ம் நாள் முதல் ஏப்ரல் 6ம்நாள் வரை சிறிலங்கா அரசத்தலைவர் அநுரகுமார திசநாயக்காவின் அழைப்பின் பெயரில் உத்தியோகபூர்வ வருகையை 2019க்குப்பின் இலங்கைக்கு மேற்கொள்ள உள்ளது எதிர்வரும் வாரத்தின் முக்கிய அரசியல் நிகழ்வாகிறது. சிறிலங்காவின் அரசத்தலைவராக அநுரகுமர திசநாயக்கா பதவியேற்ற பின்னர் அவர் சிறிலங்காவில் வரவேற்கும் முதலாவது வெளிநாட்டுப் பிரதமர் என்கிற சிறப்பும் பிரதமர் நரேந்திர மோடியையே இவ்வருகையால் சென்றடைகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தாய்லாந்தின் பிரதமரின் அழைப்பின் பேரில் பங்கொக்குக்கு ஏப்ரல் 3ம் 4ம் நாட்களில் பிம்ஸ்ரெக் (BIMSTEC) எனச்சுருக்கமாகவும் விரிவாக வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஓத்துழைப்புக்கான அனைத்துலக அமைப்பு எனவும் வழங்கப்படும் அனைத்துலக அமைப்பின் 6வது மாநாட்டில் பங்குபற்றச் செல்கின்றார். மாநாட்டில் கலந்து கொண்ட பின் நேராக இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருகின்றார். 1.73 பில்லியன் மக்களின் 5.2 ட்ரில்லியன் டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்திப்பொருட்களைக் கொண்ட தெற்காசிய 5 நாடுகளான இந்தியா பங்களாதேஸ் பூட்டான், நேப்பால் சிறிலங்கா மற்றும் இரண்டு தென்கிழக்காசிய நாடுகளான மியான்மார், தாய்லாந்து என்பவற்றை உள்ளடக்கிய இந்த அமைப்பு பாக்கிஸ்தான் சீனா இல்லாத நிலையில் இந்தியாவுக்கு அதனது உலக அரசியல் பொருளாதாரத் இணைப்புத் தேவைகளுக்கு முக்கியமான அமைப்பாக உள்ளது. அந்த வகையில் பின்வருவனவற்றை இந்தியா பலப்படுத்தவுள்ளது:- பிரதேசப்பாதுகாப்பு, ஒத்துழைப்புக் கூட்டுறவு,, பங்காண்மை, வர்த்தகத்தையும் முதலீடுகளையும் எளிதாக்கல், இயற்பியல், கடல்வழி டிஜிட்டல் இணைப்புக்கள், உணவு, சக்தி, காலநிலை மற்றும் மனிதப் பாதுகாப்பு, ஆற்றல்களைக் கட்டியெழுப்புதலும் திறன்களைவளர்த்தல், மக்களுக்கு மக்களிடையான தொடர்புகளை மேம்படுத்தல்.
இவ்வாறாக இந்தியா நாடுகளுடனும் மக்களுடனும் நெருங்கி வருவதற்குக் காரணம் இந்தியா தனக்கான புதிய உலக அரசியல் ஒழுங்குமுறையொன்றைத் தன்னளவில் கட்டியெழுப்ப வேண்டிய நிலையை சீனா தெற்காசிய தென்கிழக்காசிய நாடுகளிடை தன்னை நெருக்கமாக்கி வருவது ஏற்படுத்துவதோயாகும். 28.03.25 இல் வெளியான பங்களாதேஸ், சீன கூட்டு அறிக்கையில் பங்களாதேசின் இன்றைய ஆட்சியாளர் யுவான்ஸ் அவர்கள் தைவானைச் சீனாவின் பிரிக்க இயலாத பகுதி என்று கூறியுள்ளதும் சீனாவின் பாதைகள் மண்டலங்கள் இணைப்புத்திட்டத்தை முழுஅளவில் வரவேற்றுள்ளதும் TEESA செயற்திட்டத்தில் சீனாவுக்கு நல்வரவு கூறியிருப்பதும் தெற்கு உலகில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்புக்கு உதாரணமாகியுள்ள நிலையில் இந்தியாவுக்கு 2025ம் ஆண்டு பிம்ஸ்ரெக் மாநாடு அதனது துறைமுக கடல் பாதை பாலங்கள் இணைப்புத்திட்டத்துக்கு தாய்லாந்து மியான்மார் உடனான கடல் நில இணைப்புக்கு முக்கியமானதாகின்றது. இதே நோக்கில்தான் இம்மாநாடு முடிந்தவுடனேயே சிறிலங்காவுக்கு இந்தியப்பிரதமர் அங்கிருந்து வருகின்றார். இந்த இரு பயணத்திலும் இந்தியா தனது “அயலவர்கள் முதல்” என்ற முன்னுரிமை வெளிவிவகாரக் கொள்கை, “கிழக்கோடு செயற்படு” என்ற அதன் பொருளாதார நோக்குக் கொள்கை, மகாசாகர் என்று சுருக்கமாகச் சுட்டப்படும் பிரதேசப் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்குமான ஒருவருக்கு ஒருவர் இசைவான முழுமையான மேம்படுத்தல் (MAHASAGAR – Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions) என்கிற பாதுகாப்புக் கொள்கைகள் குறித்தும் இந்தோ பசுபிக் கடல்பிரதேச நீண்டநாள் திட்டங்களையும் இந்தியப் பிரதமர் கவனம் செலுத்துவார் என இந்திய ஊடகமையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வருகையின் பொழுது இந்தியா பிரமுகர்களாகக் கருதுகின்றவர்களையும் அரசியல்வாதிகளையும் இந்தியப்பிரதமர் சந்திக்கவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஷ்ரி இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை வருகையின் பொழுது ‘ தொழில்நுட்பம், வலுச்சத்தி,பாதுகாப்பு,
பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் உட்பட்ட ஏனைய துறைகளுடனும் இந்திய சிறிலங்கா இணைப்பு வலுவாக்கப்படும் என்று கூறியுள்ளார். சம்பூர் சூரியவொளி மின்சக்தி உற்பத்தித்திட்டத்தை இந்தியப் பிரதமர் தொடக்கி வைப்பதுடன் இலங்கையின் வலுச்சத்தியைப் பேணுதலில் இந்தியாவின் பங்காண்மையை உறுதிப்படுத்தல் தொடர்பாக இந்தியப் பிரதமர் சிறிலங்காவின் அரசத்தலைவர் மற்றும் பிரதமர் உட்பட்ட சிறிலங்காவின் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்
6ம் திகதி சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுரகுமர திசநாயக்க உடன் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் அநுராதபுர மஹாபோதியில் வழிபட்டு விட்டு அங்கிருந்து நேராக இராமேஸ்வரம் போய் இராமநவமியில் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் வழிபடுவதுடன் இந்திய சிறிலங்கா இடையிலான பாம்பன் பாலம் மீளவும் செயற்படலைத் தொடக்கி வைக்கவுள்ளார். அதாவது இராமநவமியில் பௌத்த இந்துத்துவா இணைப்பாக அமையும் இந்த இணைப்பு அரசியலில் ஈழத்தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களின் இறைமை 2044 இல் 30 ட்ரில்லியன் டொலரை அடையும் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் தன்மையினால் ஒடுக்கமடையும் தன்மையானதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 4வது சிறிலங்கா வருகையால் மாற்றப்பட்டு அதற்கான பௌத்த இந்துத்துவா உறவாடலுக்கான இணைப்புப் பாலமாக பாம்பன் பாலத் தொடக்கவிழாவும் அமைகிறது. தமிழகத்தில் புலம்பெயர்ந்து குடியுரிமை இன்று வரை கிடையாது வாழும் ஈழத்தமிழர்களை ட்ரம்ப் வெளியேற்றும் பாணியில் வெளியேற்றவே இப்பாலம் உதவக்கூடும். இதனால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 4வது சிறிலங்கா வருகை அமெரிக்க அரசத்தலைவர் ட்ரம்ப் ரஸ்ய அரசத்தலைவர் புடினின் ஆதரவையும் பெற்று கிறின்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க முற்படுவது கனடாவை பனாமாவை அமெரிக்க மாநிலமாக்க முயல்வது போன்றதாகவே ஈழத்தமிழர்களின் தாயகத்தை சிறிலங்கா அரசத்தலைவர் அநுரகுமாரவின் ஆதரவுடன் தனது மிக நுட்பமான திட்டங்கள் வழி தனதாக்கும் செயலை இந்திய சிறிலங்கா வரலாற்று மாட்சியின் மீட்சியெனச் செய்கின்றது. இன்று உக்ரேனின் நாட்டெல்லைகள் ரஸ்யாவுக்கு உக்ரேனின் கனிம வளங்கள் அமெரிக்காவுக்கு என ட்ரம்ப் புடின் சமாதான உடன்படிக்கை செய்வதையே இந்தியா ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினைக்கு ஈழத்தமிழரின் தாயக நாட்டெல்லைகள் சிறிலங்காவுக்கு தாயக வளங்கள் இந்தியாவுக்கு என்ற தீர்வையே இந்தியா கட்டமைத்துள்ளது. இதனாலேயே ஈழத்தமிழரின் கடல்வளத்தை மடிஇழுவை வலையால் தனது ரோலர்களைக் கொண்டு இந்தியா தனதாக்கும் பொழுது அதனை அனைத்துலக மன்றத்தால் தீர்க்கப்பட வேண்டிய அனைத்துலகப் பிரச்சினையாக வெளிப்படுத்தாது சிறிலங்காவும் இந்தியாவால் தீர்க்கப்ட வேண்டிய பிரச்சினையாகவே வெளிப்படுத்துகிறது. கம்ப இராமாயணத்தில் மகாகவி கம்பன் இராமரின் இலங்கை வருகையால் இராவணனின் பலம் ஒடுங்கியதைச் சுட்டப் பயன்படுத்திய இராவணன் “வெறுங்கையோடு இலங்கை புக்கான்” எனக் கூறிய கவிமொழியை ஈழத்தமிழர்கள் “வெறுங்கையோடு இலங்கை புக்கார்” பாரத் சிறிலங்கா கூட்டாண்மையால் எனப் பதிய வைக்கிறது. இதனை கனடாவில் இன்று அமெரிக்காவுக்கு வெளிப்படுத்தும் “முழங்கையை உயர்த்தித் தள்ளல்” போராட்டம் என்ற “எல்போ அப்” போராட்டம் போன்ற சனநாயகப் போராட்டத்தை ஈழத்தமிழர் முன்னெடுத்து இந்தியாவின் தமிழர் தாயகத்தை பொருளாதார இணைப்பாக தன்னுடன் இணைப்பதற்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவதைத் திரட்ட வேண்டும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
ஆசிரியர்