அனைவருக்கும் மார்ச் 20ம் நாளில் ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டாடப்படும் அனைத்துலக மகிழ்ச்சி நாள் வாழ்த்து. எல்லோரையும் உள்ளடக்கிய சமத்துவமுள்ள பொருளாதார வளர்ச்சிகளைப் பேணுவதன் வழி எல்லோருக்குமான மகிழ்ச்சியான வாழ்வு என்னும் மனித இலக்கை அனைவரும் அடைய உழைக்க வேண்டும் என்பதே இந்நாளின் நோக்கு. ஈழத்தமிழர்களும் தாங்கள் வாழும் இடங்களில் மகிழ்ச்சிக்குத் தடையாக உள்ளனவற்றை இனங்கண்டு அதனை மாற்றியமைக்கக் கூடிய வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோருவது போல இந்த விருப்புடையவர்களாக உள்ளவர்களின் கூட்டு (coalition of the willing) ஒன்றை உள்ளூராட்சித் தேர்தலால் ஆட்சி பெறச் செய்து ஈழத்தமிழர்களின் மகிழ்ச்சி வாழ்வுக்கு உதவ வேண்டும் என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது. பிரித்தானியாவே இந்த விருப்படையவர்களின் கூட்டு என்னும் நெப்போலியன் கால உத்தியினை மீளவும் முன்னெடுத்தே தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் மீளவும் இணைய முடியாத நிலையில் பிரான்சின் தலைமையில் உருவாக்கப்பட்டு வரும் ஐரோப்பிய இராணுவத்தில் உக்ரேனில் தன்னை நிலைப்படுத்த முயல்கிறது. தகைய இன்றைய சூழலில் உள்ளூராட்சித் தேர்தலில் தங்கள் தனித்துவங்களைப் பேணிய நிலையில் விருப்புடையவர்களாக உள்ளவர்களின் கூட்டு ( coalition of the willing) சைக்கிள் சின்னத்தில் இணைவதால் உருவாக்கப் பட வேண்டும். இதுவே இன்றைய உலகில் ஈழத்தமிழருக்கான அரசியல் உரையாடல்களுக்கான தளத்தைத் தோற்றுவிக்கும் என்பது இலக்கின் கருத்தாக உள்ளது. மேலும் இன்று மாரச் 15ம் நாள் அனைத்துலக இஸ்லாமியர்கள் மேலான வெறுப்புக்கு எதிரான நாளாக (International Day to Combat Islamophobia) ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படுகிறது. அதாவது இஸ்லாமியர்கள் என்ற அடிப்படையில் காட்டப்படும் வெறுப்பு அரசியல் ஆக்கிரமிப்பு முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும் என்பதே இந்நாளின் நோக்கு. இந்நாளில் ஐ.நா.வுடன் இணைந்து இஸ்லாமியர் மேலான வெறுப்பு அரசியல் நீக்கம்பெற வேண்டுமென்று இலக்கும் வலியுறுத்துகிறது. அதே நேரம் ஈழத்தமிழர்கள் மேலான வெறுப்பு அரசியலும் உலகெங்கும் பாரத் சிறிலங்கா கூட்டாண்மையால் 1990கள் முதல் பரப்பப்பட்டு மேற்குலக ஆசியுடன் பயங்கரவாதிகள் – பிரிவினைவாதிகள் என்று ஈழத்தமிழர்களைச் சித்தரிக்கிற நிலை 35 ஆண்டுகளாகத் தொடர்கிறது. இது உலகநாடுகள் ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கத் தடையாக உளள்து. இதுவே ரணில் விக்கிரமசிங்கா பலஸ்தீனியர்களை நாடுகள் தன்னாட்சி உள்ளவர்களாக அங்கீகரிப்பதால் சிறிலங்காவும் அதனை ஏற்கிறது ஆனால் ஈழத்தமிழர்களை ஒரு நாடும் 1983 முதல் இன்று வரை தன்னாட்சி உள்ளவர்களாக அங்கீகரிக்காதபடியால் சிறிலங்காவும் அவர்களை அங்கீகரிக்கவில்லை என்று அவரது அல்ஜசீராவுக்கான செவ்வியில் கூற வைத்தது. இந்நிலையில் ஈழத்தமிழர்களின் மேலான உலக வெறுப்புகளுக்கு எதிரான நாள் ஒன்று ஐக்கிய நாடுகள் சபையால் கட்டமைக்கப்பட உலகத் தமிழர்கள் உழைக்க வேண்டும் அதுவே ஈழத்தமிழர்களின் தன்னாட்சிக்கான அனைத்துலக நாடுகளின் ஆதரவைப் பெற்றுத் தரும் என்று இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
இந்நேரத்தில் சிறிலங்காவின் 2025ம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல், 1972இல் ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்குவதை நோக்காகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் போல, இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்வதால் தன்னாட்சி உரிமை உள்ளவர்களாய் வாழ்ந்து வரும் ஈழத்தமிழரின் இருப்பையும் அவர்களின் தனித்துவமான தேசிய வாழ்வியலால் கட்டமைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் நாகரீகத்தையும் இல்லாதொழிக்கும் வகையில் அவர்களை வடக்கினர் கிழக்கினர் என மீள்வரைவு செய்யும் பண்பாட்டு இனஅழிப்பு நோக்குடைய தேர்தலாக முன்னெடுக்கப்படுகிறது என்பதை இலக்கு தாயகத்திலும் அனைத்துலகிலும் உள்ள ஈழத்தமிழர்களுக்கு கவனப்படுத்த விரும்புகிறது. ஈழத்தமிழரின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் அவர்களின் வரலாற்றுத் தாயகம் என்ற இருப்பை நிராகரித்து வடக்கு கிழக்கு வாழ் சமுகத்தவர் என்ற ரணில் அரசாங்கத்தின் புதிய வரைவிலக்கணத்துக்கு ஏற்ப வடக்கு பொருளாதாரம் கிழக்கு பொருளாதாரம் எனப் பேசும் அநுர ஈழத்தமிழர்கள் இதனை ஏற்கவைக்கும் குடியொப்பமாகவே உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் தனது தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இதனால்தான் கட்சி வேறுபாடுகளைக் கடந்து இதனை எதிர்ப்பதற்கான சட்ட முறைமையின் உறுதிப்பாட்டுக்காக அனைத்து ஈழத்தமிழர் தாயக உள்ளூராட்சி சபைகளிலும் சைக்கிள் சின்னம் வெற்றி பெற உழைக்கும்படி கேட்க வேண்டிய தேவை இலக்குக்கு ஏற்படுகிறது. சென்ற சிறிலங்காவின் அரசத்தலைவர் தேர்தலிலும் இலக்கு இதே அடிப்படையில்தான் சங்குச் சின்னத்திற்கு வாக்களிக்க இலக்கு வலியுறுத்தியது.
மேலும் பொதுக் கருத்துக்கோளங்கள் (Public Spheres) வழி அரசியலை நிர்ணயிக்கும் சனநாயகமுறை உலக அரசியலில் மாற்றப்பட்டு செல்வாக்குக் கோளங்கள் (Spheres of influence) வழி உலக அரசியலை நிர்ணயிக்கும் புதிய உலக அரசியல் ஒழுங்கை ட்ரம்ப் கடந்து வாரத்து தனது அமெரிக்க காங்கிரசிலான “நாட்டின் நிலை” குறித்த அரச அதிபருரையில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இந் நிலையில் உலகின் மூத்த குடிகளாகவும் சிறிய தேசஇனமாகவும் உள்ள ஈழத்தமிழர்கள் செல்வாக்குக் கோளங்களுள் தாங்களும் இணையத்தக்க வகையில் ஈழத்தமிழர் தாயகத்தின் மூலவளங்கள் மனிதவலு மூலதனப் பலம் என்பவற்றை உள்ளூராட்சித் தேர்தல் களத்தின் வழி உலகிற்கு வெளிப்படுத்தல் முக்கியமானதாகிறது என்பதை இலக்கு வலியுறுத்த விரும்புகிறது. அதேவேளை இன்றைய உலக புதிய அரசியல் முறைமை உலகின் எத்தகைய தன்மையான அரசுடனும் அதன் இலட்சியத் தன்மையைக் கருதாது ‘முறைசார்பற்ற பொதுக்கருத்திசைவுகள்’ (Informal consensus) மூலம் கூட்டுக்களை உருவாக்குதல் வழி அரசாங்கத்தின் செயற்திறனை (DODGE) உறுதிப்படுத்தல் என்பதை அரசியல் ராஜதந்திரமாக வளர்த்தெடுக்கிறது. இதனை அமெரிக்க ரஸ்ய உக்ரேன் அமைதிப்பேச்சு முயற்சி உலகுக்குத் தெளிவாக்கியுள்ளது. அமெரிக்கா தனது கூட்டு நாடுகளை விட்டு ரஸ்யாவுடன் சீனாவுடன் உறவுகளைப் பலப்படுத்துவதும் கனடாவை கிறீன்லாந்தை பனமாவைத் தனதாகவே மாற்ற முயல்வதும் உலக வர்த்தகப் போரை தனது கூட்டு நட்பு நாடுகள் மேலும் தொடுத்திருப்பதும் உறுதிசெய்துள்ளது. இதற்கேற்ப ஈழத்தமிழர்கள் தங்களுக்கான புதிய அரசியலை முன்னெடுப்பதற்கான கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதனை தொடங்குவதற்கான முதல்வெற்றியாக ஈழத்தமிழர்களின் தேசியத்தை முன்னெடுக்கும் உள்ளூராட்சி உருவாக்கப்பட வேண்டும் என்பதே இலக்கின் கருத்தாக உள்ளது அவ்வாறே இந்தியா 1974 -76 களில் வரையப்பட்ட இலங்கையுடனான கடல் எல்லைகளை தேசப்படத்திலேயே வைத்துவிட்டு இன்று இழுவை மடி மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தும் இந்திய மீனவரால் பாக்கு நீரிணை மற்றும் முல்லைத்தீவு கடற்பகுதிகள் புதுக்கோட்டை நாகபட்டின மீனவர்களின் மீன்பிடித்தளமாகவும் பாக்குகுடா கடல் இராமேஸ்வர மீனவர்களின் மீன்பிடித்தளமாகவும், மன்னார்க்குடா தூத்துக்குடி மீனவர்களின் மீன்பிடித் தளமாகவும், மாற்றி வருகிறது. இது இந்தியா வெளிப்படையாகவே கூறும் சக்தி அரசியல் செயல்தான். இந்நேரத்தில் இந்தியாவுடனும் உரையாடல்களை நடாத்த ஈழத்தமிழ்த் தேசியத்தின் மேல் விருப்புடையவர்களாக உள்ளவர்களின் கூட்டு அமைக்கப்படுவதும் அது உள்ளூராட்சியை வென்று தனக்கு மக்களாணை உண்டெனக் காட்டுவதும் காலத்தின் தேவை என்பதை இலக்கு அழுத்திக் கூற விரும்புகிறது. இறுதியாக கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி அவர்களுக்கு ஈழத்துக்கு வெளியே அதிகளவில் தமிழர்கள் வாழும் நாட்டின் பிரதமர் என்ற வகையில் இலக்கு தனது வாழ்த்தை ஈழத்தமிழர்கள் சார்பாகத் தெரிவிக்க விரும்புகிறது.