ஈழத்தமிழர் இறைமையை ஆக்கிரமிப்பதே ரணிலின் புதிய அரசியலமைப்பின் இலக்கு | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 206

ஈழத்தமிழர் இறைமையை ஆக்கிரமிப்பதே
ரணிலின் புதிய அரசியலமைப்பின் இலக்கு

ஈழத்தமிழர்களின் நடைமுறை அரசை சட்ட அங்கீகாரம் பெற்ற அரசாக மாறுவதை 2009ம் ஆண்டின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு மூலம் தடுத்து மீளவும் ஈழத்தமிழர் தாயகத்தை படைபல ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கியது மகிந்த ராசபக்சா என்றாலும், அதற்கான அனைத்து வகையான வலைப்பின்னல்களையும் கட்டி எழுப்பியவர் ரணில் விக்கிரமசிங்கா என்பது ஈழத்தமிழர் வரலாறாக உள்ளது. ரணிலின் இலக்கு இலங்கை சிங்கள நாடு சிங்கள மக்களுடைய ஆட்சிக்குரிய நாடு, அதன் சட்டம் பௌத்த ஆகமச் சட்டம் என்பதை உறுதிப்படுத்தும் சிங்கள பௌத்த மேலாண்மையே என்பது ஈழத்தமிழர்களுக்கு நன்கு தெரியும்.
ரணிலின் அரசியல் தளமான ஐக்கிய தேசியக்கட்சியின் இலங்கையின் முதல் பிரதமரான டி எஸ். சேனநாயக்காவே பிரித்தானியக் காலனித்துவ அலுவலகச் செயலாளரை, சோல்பரி அரசியல் அமைப்பு ஆணைக்குழுவுக்கு தாங்கள் வழங்கிய இலங்கைத் தமிழ் மக்களது அரசியல் உரிமைகள் குறித்த கோரிக்கை குறித்துப் பேச இலண்டன் சென்ற அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டாமெனத் தடுத்து அரசியலமைப்பு நிர்ணய சபை மூலம் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கியது போல இலங்கைக்கும் அரசியலமைப்பு நிர்ணய சபை மூலம் சுதந்திரம் வழங்க அனுமதிக்காது சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சியில் ஈழத்தமிழர்களின் விருப்பின்றி சிங்களவர்களின் இறைமையுடன் ஈழத்தமிழர்களின் இறைமையையும் இணைத்துக் காலனித்துவ பிரித்தானிய அரசினை சுதந்திரம் வழங்கச் செய்தவர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக முதலாவது இலங்கைப் பாராளமன்றக் காலத்தில் பொறுப்பு வகித்த ரணிலின் உறவினரும் குருவுமான ஜே. ஆர். ஜயவர்த்தனா சிங்களமே அரசகரும மொழி என்ற சிங்களம் மட்டும் சட்டத்திற்கு களனிமாநாட்டில் வித்திட்டவர். அதனை 1956இல் சுதந்திரக்கட்சியின் தலைவரும் அக்காலப் பிரதமருமான எஸ் டபிள்யூ. ஆர். டீ பண்டாரநாயக்கா சட்டமாக்கினார். 1958 தமிழின அழிப்பைத் தொடர்ந்து மாவட்டசபைகள் மூலம் வடக்குகிழக்குக்கான நியாயமான உரிமைகளை எஸ்;. டபிள்யூ. ஆர். டீ பண்டாரநாயக்கா தந்தை செல்வாவுடனான உடன்படிக்கை வழி கையளிக்க முற்பட்ட பொழுது அதனைக் கிழித்தெறிய வைத்ததும் ஐக்கிய தேசியக்கட்சியின் ஜே. ஆர் ஜயவர்த்தனாவே. 1965இல் தரப்படுத்தல் மூலம் ஈழத்தமிழர்களின் உயர் கல்வியை மட்டுப்படுத்தியதும் ஐக்கிய தேசியக்கட்சியின் கல்வி அமைச்சரான ஐ. எம். ஆர். ஏ ஈரியக்கொல்லையே, அடையாள அட்டை முறைமையும், திருக்கோணேஸ்வரப் புனிதநகர் பிரகடனமும், பலாலி இராணுவ முகாமும், வடக்கு கிழக்கில் நியாயமான தமிழ்மொழிப் பயன்பாட்டுக்கான டட்லி செல்வா உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாது விட்டதும், இங்கிலாந்தின் பிரிவிக் கவுன்சில் சிங்களம் மட்டும் சட்டம் மீளவும் இனத்துவ உரிமைகளைப் பாதிக்காத வகையில் திருத்தப்பட்டுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அளித்த தீர்ப்பை செயற்படுத்தாது விட்டு சோல்பரி அரசியலமைப்பை வன்முறைப்படுத்தி இலங்கை சிங்கள பௌத்த சோசலிசக் குடியரசினை 1972ம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் சிறிமாவோ பண்டாரநாயக்கா உருவாக்கி ஈழத்தமிழர்களை அரசற்ற தேசஇனமாக மாற்ற வித்திட்டதும் டட்லிசேனநாயக்காவைப் பிரதமராகக் கொண்ட ஐக்கிய தேசியக்கட்சிதான். 1978ம் ஆண்டு இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையையும் விகிதாசாரத் தேர்தல் முறைமையயும் அறிமுகம் செய்து ஈழத்தமிழர்களின் மேலான நீண்டகால ஒடுக்குமுறையினை உருவாக்கியதும் ஜே. ஆரே. 1978இல் யாழ்ப்பாணத்தின் அரசியல் விழிப்புணர்வுள்ள இளையவர்களை அழிக்கும் படி மார்கழி வரை காலக்கெடு கொடுத்து தனது மருமகன் இராணுவத் தளபதி கொப்பே கடுவவை அனுப்பியதும் ஜே.. ஆரே. 1979 இல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இலங்கையின் நடைமுறைச் சட்டமாக்கி படையினர்க்குச் சந்தேகப்படுபவர்களை கண்ட இடத்தில் சுடவும். சுட்ட இடத்தில் விசாரணையின்றி எரிக்கவும். ஆணை வழங்கியதும் ஜே. ஆரே. 1978ம் ஆண்டில் 13வது திருத்தமும் இந்த 1978ம் ஆண்டு அரசியலமைப்பிலேயே நிதி நிர்வாகப்பரவலாக்கலுக்கான கருவியான மாகாணசபைகள் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பின்னர் இன்று வரை 22 திருத்தங்களை இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பு கண்டாலும் அத்தனையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை உறுதிப்படுத்தி ஈழத்தமிழர்களின் இறைமையை அபகரித்தல் என்ற ஒரே நோக்கிலேயே அமைந்துள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால் சிங்கள ஆட்சியாளர்கள் தங்களின் நிலையான அரசத் தன்மைக்கும் ஈழத்தமிழர்களை இனஅழிப்பின் மூலம் இனங்காணக் கூடிய அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களின் இறைமையை ஆக்கிரமிப்பதற்குமே அரசியலமைப்பை தங்கள் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் சட்ட ஆவணமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த நரித்தந்திர அரசியல் நோக்கின் உச்சமாக அமைவதே ஒரு நாடு ஒரு சட்டம் என்னும் இன்றைய சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வழியான ராசபக்ச குடும்ப அரசியல் கோட்பாட்டுக்கான சட்டவுலுவைப் பெறும் முயற்சியே புதிய அரசியலமைப்பு முயற்சி உலக வல்லாண்மைகளும், பிராந்திய மேலாண்மைகளும் இலங்கைத் தீவில் தங்களுக்கு உள்ள மேலாதிக்கத்தை உச்சப்படுத்தும் வகையில் செயற்படுகின்ற நிலையில் அவை சிங்கள அரசுடனான தங்கள் நல்லுறவுகளைப் பலப்படுத்துவதையே தங்களின் தலைமை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன. இதனால் இவை ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினை என்பதை உள்நாட்டுப்பிரச்சனையாகவே எப்பொழுதும் சிங்கள அரசாங்கங்களின் தீர்வுக்குக் கையளிக்கின்றன.
இந்நிலையில் தற்போது 22ம் அரசியலமைப்புத் திருத்தத்தை 174க்கு 1 என்ற வாக்களிப்புப் பலத்தால் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அதன் அடிப்படையில் இரண்டரை ஆண்டுகளின் பின்னர் பாராளுமன்றத்தைத் தேவையேற்படின் கலைக்கும் முன்னைய நிலையை மீளவும் நிறுவிக் கொண்ட இன்றைய ஜனாதிபதி மீளவும் புதிய அரசியலமைப்புப் பேரவை ஒன்றை நிறுவி புதிய அரசியலமைப்பை ஒரு ஆண்டுக்குள் உருவாக்க அடியெடுத்து வைத்துள்ளார். இந்த அடி ஈழத்தமிழ் மக்களின் இறைமையைப் பெயரளவிலும் இல்லாதொழிப்பதற்கான பெரிய அடியாக வேகமாக வளரவுள்ளது. இதனை எதிர்கொள்ள உலக மக்களுக்கும் நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் உண்மைத்தன்மைகளை எடுத்துரைத்து ஈழத்தமிழர்களின் இறைமையை ஏற்றதாகப் புதிய அரசியலமைப்பை நெறிப்படுத்த உடனடியாக உலகளாவிய ஈழத்தமிழர் பொதுப்பேரவை ஒன்று நிறுவப்படுதல் அவசியம் என்பதே இலக்கின் எண்ணமாக உள்ளது.

ஆசிரியர்

Tamil News