தந்தை செல்வா கொண்டு வந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் யுத்தமும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது

இலங்கையில் தந்தை செல்வாவின் மூலம் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த நாட்டில் யுத்தமும் ஏற்பட்டிருக்காது, இன்றைய பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 45வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,

தற்போது இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியிலே நாங்கள் இன்றைய தினம் தந்தை செல்வா அவர்களை நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையிலே தமிழ் மக்களுக்கான தலைமையைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தந்தை செல்வா அவர்கள் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். இலங்கை மக்களுக்கு சமஸ்டி ஆட்சி முறையே வேண்டும் என்பதனைக் கருத்திற் கொண்டு இக்கட்சியை அவர் சமஸ்டிக் கட்சியாகவே உருவாக்கியிருந்தார்.

இருந்தும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று தான் விட்டு வந்த தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரை அணுகி 27 வருடங்களின் பின்னர் ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களையும் இணைத்து தமிழர்களுக்குரிய தீர்வு தமிழ்ஈழம் தான் என வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை உருவாக்கியிருந்தார்.  அவரது ஒற்றுமை எண்ணம் தற்போது தமிழ் மக்களிடையே ஏற்பட வேண்டிய ஒரு நிலைமை இருக்கின்றது.

அதே ஒற்றுமையின் நிமித்தம் 2001ம் ஆண்டு போராட்ட இயக்கங்கள், மிதவாதக் கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றம் பெற்றது. அதே ஒற்றுமையுடன் 2004ம் ஆண்டுத் தேர்தலிலே 22 பாராளுமன்ற உற்பினர்களைக் கொண்டிருந்த கட்சி 2009ற்குப் பின்பு சிதறுண்டு இருக்கின்றது. தந்தை செல்வாவின் எண்ணம் தமிழ்த்தேசியப் பரப்பில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் வரவேண்டும். அனைவரும் ஒற்றுமையாகத் தமிழ் மக்களின் குரலாகப் பாடுபட வேண்டும்.

இன்று இலங்கை மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றார்கள். ராஜபக்ச சகோதரர்கள் அனைவரும் இந்த அரசை விட்டு வெளியேற வேண்டும், ஜனாதிபதி வெளியேற வேண்டும் என்ற கோசங்கள் சிங்கள இளைஞர்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவி வருகின்றது.

தந்தை செல்வா அவர்கள் 1957ம் ஆண்டு பண்டாரநாயக்காவுடன் ஏற்படுத்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த நாட்டில் ஒரு போர் மூண்டிருக்காது. அதனைத் தொடர்ந்து மாறி மாறி வந்த அரசாங்கங்கள் போருக்காக அதிகமான பணத்தைச் செலவழித்திருக்க மாட்டாது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் 1977ம் ஆண்டு ஜனாதிபதியாக வந்த பிற்பாடு போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் எனக் கூறி மிகப் பெரிய போருக்கு வழிகொடுத்திருந்தார் அவரைத் தொட்டு வந்த ராஜபக்ச சகோதரர்கள் மிகவும் உக்கிரமான போரை நடத்தியிருந்தார்கள். அதற்கு பில்லியன் கணக்கில் நிதியினைப் பயன்படுத்தியமையே பொருளாதார நெருக்கடிக்கு முதல் முக்கிய காரணமாகும்” என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamil News