Tamil News
Home செய்திகள் போர்க் குற்றவாளிகளை ஆதரிக்க மாட்டேன் என்றேன்;கட்சியில் இருந்து நீக்கினார்கள்- அனந்தி

போர்க் குற்றவாளிகளை ஆதரிக்க மாட்டேன் என்றேன்;கட்சியில் இருந்து நீக்கினார்கள்- அனந்தி

போர்க்குற்றவாளிகளை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்க மாட்டேன் என்று என்னுடைய மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நான் கூறியதால் ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பெயரில் வெளியேற்றப்பட்டேன் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வேட்பாளர் அனந்தி சசிதரன் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

நான் வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக மூன்றரை வருட காலமும் அமைச்சராக ஒன்றரை வருட காலமும் இருந்திருக்கின்றேன்.என்னுடைய கணவர் உட்பட ஆயிரக்கணக்கானவர்களுக்கு சரணடைந்தவர்களை என்ன நடந்தது என்ற பொறுப்புக்கூறல் காரணமாகத்தான் நான் இந்த அரசியலுக்குள் வந்தேன்

வந்த பொழுது அரசியல் எனக்கு பொருத்தமில்லாத விடயம் என்று இருந்த போதும் கூட நான் எனக்கு ஆசனம் தாருங்கள் என்று கேட்கவில்லை ஆனால் உங்களுக்கு ஆசனம் தருகின்றோம் நீங்கள் வாருங்கள் என்று போட்டி போட்டுக்கொண்டு வந்த இடத்தில் தான் இந்த அரசியலுக்குள் நான் பிரவேசித்திருந்தேன்

அன்று நாடாளுமன்ற ஆசனம் தாருங்கள் என கேட்டு வந்தவர்கள் ,போரில் சரணடைந்து காணாமல் போனோர் விடயம் தொடர்பாகவோ அல்லது கொல்லப்பட்டவர்களின் நீதி தொடர்பாகவோ எந்த ஒரு நடவடிக்கை தொடர்பாகவும் இதய சுத்தியுடன் செயற்படவில்லை வெறும் வெளிப்போக்குக்காக நாங்கள் அதை செய்தொம் இதை செய்தொம் என்று கூறியவர்கள் இதய சுத்தியுடன் செயற்படவில்லை.

உங்களைப்போலத்தான்  வெளியில் இருந்து பார்த்த பொழுது ஏதோ எங்களுக்காக இவர்கள் எல்லாம் குரல் கொடுக்கின்றார்கள் என்ற மாயை தோற்றத்துக்குள் தான் நானும் அப்பொழுது இருந்தேன் .

போர்க்குற்றவாளிகளை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்க மாட்டேன் என்று என்னுடைய மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நான் கூறியதால் ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பெயரில் வெளியேற்றப்பட்டேன்

இன்றைக்கு போரின் பாதிப்பில் மக்களுக்காக வந்த நிதி தொடர்பில் தமிழரசு கட்சி செயலாளர் விமலேஸ்வரி அம்மா சொன்ன கருத்துக்கு ஒரு உட்கட்சி ஜனநாயகம் இல்லாமல் உடனடியாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றார்.

தேர்தல் நிதிக்கு வந்ததை ஏதும் செய்திருந்தால் கூட யாரும் எதுவும் கேட்டுக்கொள்ள மாட்டோம்.ஆனால் போரின் பாதிப்பில் இருந்து மக்களை மீண்டெழ வைக்கின்ற குறிப்பாக பெண்களுக்காக வந்த நிதியை எவ்வாறு அவர்கள் கையாண்டார்கள் என்ற உண்மையை சொல்லவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்
Exit mobile version