பசியில் கர்ப்பிணி மனைவி – பலாப்பழம் பறிக்கச் சென்ற கணவர் கொலை

பலாப்பழம் பறிக்கச் சென்ற கணவர் கொலை

பலாப்பழம் பறிக்கச் சென்ற கணவர் கொலை

கர்ப்பிணி மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரின் பசியை போக்குவதற்காக பலாப்பழம் பறிக்கச் சென்ற நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எல்பிட்டிய – பிட்டுவல பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலாப்பழம் தொடர்பான தகராறில் நபரொருவர் தனது உறவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எல்பிட்டிய, பிட்டுவல வீதியின் 2ஆம் தூண் பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கர்ப்பிணியான தனது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு மதிய உணவிற்காக பக்கத்து காணியில் இருந்த பலா மரத்தில் ஏறி பலாப்பழத்தை பறித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஏற்பட்ட தகராறின் காரணமாக பக்கத்து வீட்டுக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் பின்னர் பக்கத்து வீட்டுக்காரர் குறித்த நபரை கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.