கடன் வழங்குநர்கள் விரைவில் இலங்கைக்கு உதவ வேண்டும்- HRW

இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் கடன் வழங்குநர்கள் விரைவில் பதிலொன்றை வழங்காவிட்டால், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை அபாயத்தை எதிர்நோக்கலாமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு கடன்களை மறுசீரமைக்க கடன் வழங்குநர்கள் இணங்குவது அவசியமென அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதனூடாக சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள முடியுமெனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பிரதான கடன் வழங்குநர்களான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் விரைவில் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் பொருளாதார நெருக்கடியினால் ஏற்படும் மனித உரிமை மீறல்களை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்க சர்வதேச நாணய நிதியம் தனது நடைமுறைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.