வைத்தியசாலைகளில் கறுப்புக்கொடி, பதாகைகளுக்கு தடை விதித்து சுகாதார அமைச்சு சுற்றறிக்கை வெளியீடு

வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் கறுப்புக் கொடி காட்டுவதைத் தடை செய்து சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 24, 2023 திகதியிட்ட சுற்றறிக்கை சுகாதார செயலாளரால் கையொப்பமிடப்பட்டு, மாகாண சுகாதார செயலாளர்கள் மற்றும் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன ஆரோக்கியத்தை கருத்திற்க் கொண்டு இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஒரு முக்கிய சேவையாக நோயாளிகளைக் கவனித்து உயிர்களைக் காப்பாற்றுவதில் அனைத்து சுகாதார ஊழியர்களும் ஆற்றிய சிறப்புப் பங்களிப்பை பாராட்டுவதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சு, சில குழுக்கள் சுகாதார சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக தெரிவித்துள்ளது.

பதாகைகள் மற்றும் கறுப்புக்கொடிகளை காட்சிப்படுத்துவது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளின் மனநலம், அர்ப்பணிப்புள்ள வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் செயற்பாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.