Tamil News
Home செய்திகள் தனது தோல்வியை மறைக்க இரகசிய பிரசாரத்தை கோட்டாபய ஆரம்பித்துள்ளதாக தகவல்

தனது தோல்வியை மறைக்க இரகசிய பிரசாரத்தை கோட்டாபய ஆரம்பித்துள்ளதாக தகவல்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்களால் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து அங்கு புகழிடம் மறுக்கப்பட்ட பின் அண்மையில் நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச, தமக்கு ஏற்பட்ட தோல்வி பிம்பத்தைத் துடைக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“இதன் ஒரு கட்டமாக, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது ‘கம சமக பிலிசந்தர’ திட்டத்தின் கீழ், அவர் விஜயம் செய்த கிராமங்களுக்கு தற்போது ஊடகவியலாளர் மற்றும் வர்த்தக அதிபர் ஒருவரால் அமைக்கப்பட்ட குழுவொன்று விஜயம் செய்து வருகிறது.

இந்த உறுப்பினர்கள் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். இந்த கிராமங்களில் கோட்டாபய ராஜபக்ச மீதான மக்களின் கருத்துக்களை அறியவும், முன்னாள்  ஜனாதிபதி மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளதா என்பதை சோதிப்பதற்காகவும் கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுகின்றன.

“வியத்மக” அணிக்கு நிகரான இந்தக் குழுவால் நடத்தப்படும் இந்த சமூக ஊடக ஆய்வு, தோல்வியடைந்த ஜனாதிபதி எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் அரசியலில் நுழைய முடியுமா என மக்களின் உணர்வுகளைக் கண்காணித்து வருகின்றது.

எனினும் தற்போது அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்படவில்லை. மறுபுறம், ராஜபக்ச அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பித்துள்ளார், ஆனால் செயல்முறை நீண்ட காலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையில், இந்த அந்தஸ்து வழங்கப்பட்டாலும், ராஜபக்ச தொடர்ந்து நாட்டில் தங்கியிருப்பார் என்றும், தனது மகன் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க மட்டுமே அமெரிக்கா செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை தாம் தவறாக வழிநடத்தப்பட்டதாக, அவர் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், முன்னாள் ஜனாதிபதிக்கு பல தடவைகள் கரிம உரக் கொள்கையை நடைமுறைப்படுத்த  வேண்டாம் என அறிவிக்கப்பட்டதாகவும் கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இதில் ஒருவராவார்.

Exit mobile version