Tamil News
Home செய்திகள் மலையக மாணவர்களுக்கான இந்திய அரசின் உதவித்தொகை நீடிப்பு

மலையக மாணவர்களுக்கான இந்திய அரசின் உதவித்தொகை நீடிப்பு

இந்திய அரசு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளது படிப்பிற்கான உதவித்தொகையை நீடித்து வருகின்றது.

இலங்கையில் உள்ள அரச தொழில்நுட்பக் கல்லூரிகளில் உயர்தரம், இளங்கலை பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

6 திறமைச் சித்திகளுடன் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் சித்தியெய்தியவர்கள் அல்லது உயர்தரப் பரீட்சையில் சித்தி எய்திய 25 வயதுக்கு குறைவானவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம் தற்போது கோரியுள்ளது.

விண்ணப்பப் படிவங்களை www.hcicolombo.gov.in என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது இந்திய உயர்ஸ்தானிகரகம், அஞ்சல் பெட்டி எண். 36-38, காலி வீதி, கொழும்பு-03 மற்றும் 47, மஹாமாயா மாவத்தை கண்டியில் அமைந்துள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தமது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பெற்றோரின் சமீபத்திய வேதனச் சீட்டு மற்றும் பெற்றோரின் தொழில் தொடர்பான தோட்டக் முகாமையாளரின் சான்றிதழ் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கௌரவ செயலாளர், இந்திய உயர்ஸ்தானிகரகம், இல.882, கொழும்பு-03 என்ற முகவரிக்கு 2023, ஏப்ரல் 29 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Exit mobile version