தமிழ்நாடு அரசு சார்பில் இலங்கைக்கு கூடுதல் உதவி அளிக்க மு.க. ஸ்டாலின் உறுதி

இலங்கைக்கு கூடுதல் உதவிப் பொருள்களை அனுப்ப தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

அந்தச் செய்தியின்படி, சென்னை தலைமை செயலகத்தில் சனிக்கிழமை தன்னைச் சந்தித்த இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகோடாவிடம் இந்த உறுதியை அவர் அளித்தார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு மத்திய அரசு மூலமாக தமிழ்நாடு அரசு ஏற்கெனவே உதவி அளித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இலங்கை தூதர் மிலிந்த மொரகோடா சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் ,மிலிந்தா மொரகோடா வெளியிட்ட பதிவில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்துப் பேசினேன். இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ள வகையிலும் தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இருந்தது.

சந்திப்பின்போது, இலங்கைக்கு கூடுதல் உதவிகளை அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைக்குத் தேவைப்படும் கூடுதலான அத்தியாவசிய பொருள்கள் அனுப்பப்படும் என்று உறுதியளித்தார்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வாழ் மக்களுக்கு உதவும் வகையில் சென்னை துறைமுகத்திலிருந்து அந்த நாட்டுக்கு 9 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் ஆவின் பால் பவுடர், 24 மெட்ரிக் டன் அத்தியாவசிய மருந்து பொருள்களை தமிழக அரசு கடந்த மாதம் 18-ம் திகதி  கப்பல் மூலம் அனுப்பி வைத்தது. இந்தக் கப்பலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட இந்தப் பொருள்களின் மொத்த மதிப்பு 45 கோடி.

இதைத் தொடர்ந்து மேலும் நிவாரணப் பொருள்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான உறுதியை தலைமைச் செயலகத்தில் தன்னைச் சந்தித்த இலங்கைத் தூதரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.

Tamil News