இலங்கையில் காணப்படும் பதற்றநிலையை அமைதியான முறையில் அரசாங்கம் தணிக்க வேண்டும் – ஐ.நா

இலங்கையில் காணப்படும் பதற்றநிலை

இலங்கையில் காணப்படும் பதற்றநிலையை அமைதியான வழிமுறைகளை பயன்படுத்தி அரசாங்கம் தணிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பேச்சாளர் லிஸ் த்ரோசல் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை அதன் வரலாற்றில் பல தசாப்தங்களில் காணத மோசமான பெரருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு எதிராக எழுந்துள்ள பாரிய ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுவத்துவதற்காக அதிகாரிகள் அவசரகால சட்டத்தினையும்,ஏனைய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளதை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.

சமீப மாதங்களில் பொதுமக்களின் விரக்திஅதிகரித்து வருவதுடன் பெருமளவிற்கு அமைதியான ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெறுகின்றன. எனினும் தீடிரென எரிபொருள் சமையல் எரிவாயு அத்தியாவசிய உணவுப்பொருட்களிற்கு ஏற்பட்ட தட்டுபாடு மற்றும் மின்வெட்டு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக நிலைமை மோசமடைந்துள்ளது.இது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அடிப்படை பொருட்களை பெறுவதால் கடும் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கையர்கள் மத்தியில் மேலும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மார்ச் 31ம் திகதி ஜனாதிபதியின் இல்லத்திற்கு வெளியே இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அரசாங்கம் முதலாம் திகதி அவசரகாலநிலையை பிரகடனம் செய்ய தீர்மானித்தது. ஏப்பிரல் இரண்டாம் திகதி முதல் 36 மணிநேர ஊரடங்கினை அறிவித்த அரசாங்கம் மூன்றாம் திகதி 15 மணித்தியாலங்களிற்கு மேல் சமூக ஊடகங்களை முடக்கிவைத்திருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக தேவையற்ற அளவுக்கதிகமான வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் தங்கள் நியாயபூர்வமான கரிசனைகளை அமைதியான வழிமுறைகள் மூலம் வெளிப்படுத்துவதை தடுப்பதை நோக்கமாக கொண்டவை என நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம், மேலும் இவை பொது மக்களின் நலன் தொடர்பான விடயங்கள் குறித்த கருத்து பரிமாற்றத்திற்கு முட்டுக்கட்டை விதிக்கின்றன.

அவசரகாலசட்டம் தொடர்பான நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களை பின்பற்றுபவையாக காணப்பட வேண்டும் என்பதையும் – சூழ்நிலைக்கு தேவைப்படும் அளவிற்கு மட்டுப்படுத்தப் பட்டதாக காணப்படவேண்டும் என்பதையும், இணங்க மறுத்தலை தடுப்பதற்கோ அல்லது அமைதியான ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்கோ அவற்றை பயன்படுத்த முடியாது என்பதையும் இலங்கை அரசாங்கத்திற்கு நாங்கள் நினைவூட்டுகின்றோம்.

இலங்கை நிலவரத்தை மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானிக்கும். மனித உரிமை பேரவைக்கான தனது பெப்ரவரி அறிக்கையில் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்தது போல இராணுவ மயப்படுத்தலை நோக்கிய நகர்வுகள் உட்பட பல விடயங்களால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை கண்டு இலங்கை மக்களின் பொருளாதார கலாச்சார உரிமைகளை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார அரசியல் சவால்களிற்கு தீர்வை காண்பதற்கும் நிலைமை மேலும் துருவமயப்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்கும். உடனடியாக அனைவரையும் உள்ளடக்கிய அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் அரசியல் கட்சிகள் சிவில் சமூகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

Tamil News