இந்திய நிதியுதவியில் சமூக அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

இந்திய நிதியுதவியின் கீழ் அதிக விளைவுகளைக் கொண்ட சமூக அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்திய நிதியுதவியின் கீழ் அதிக விளைவுகளைக் கொண்ட சமூக அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டம் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2005-2010, 2010-2015 மற்றும் 2015-2020 வரையான காலப்பகுதிகளுக்கான இரு நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.

குறித்த கருத்திட்டத்தின் கீழ் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தித் துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

இக்கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உப கருத்திட்டமொன்றின் செலவு 300 மில்லியன் ரூபாவாக மட்டுப்படுத்தப்படுவதுடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் மொத்தக் கருத்திட்டங்களின் உயர்ந்தபட்ச பெறுமதி 5 பில்லியன் ரூபாவாக அமையும்.

ஆனாலும், நாட்டில் தற்போது நிலவுகின்ற நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக 300 மில்லியன் ரூபாய் உயர்ந்தபட்ச பெறுமதி எல்லையில் ஒருசில கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சிரமமாக அமைவதால், குறித்த எல்லையை 600 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் மொத்தக் கருத்திட்டங்களின் உயர்ந்தபட்ச பெறுமதியை 10 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கும் இரு தரப்பினர்களும் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இரு நாடுகளுக்கிடையில் கையொப்பமிடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் திருத்தம் செய்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.