Home செய்திகள் தமிழ்க் கைதிகளை உறவினர்கள் பார்வையிட அரசிடம் அனுமதி கோருவோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்க் கைதிகளை உறவினர்கள் பார்வையிட அரசிடம் அனுமதி கோருவோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்க் கைதிகளை உறவினர்கள் பார்வையிட அரசிடம் அனுமதி
அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற மிக மோசமான அச்சுறுத்தலை அடுத்து, தமிழ்க் கைதிகளை உறவினர்கள் பார்வையிட அரசிடம் அனுமதி கோருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 11 மணிக்கு இடம்பெற்ற இணையவழியிலான ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த சிறைக் கைதிகளின் குடும்பத்தினர் அச்சம் கொள்கின்றனர். கைதிகள் இப்போது என்ன மன நிலையில் உள்ளனரோ என்பதை அறிவதற்காக அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என அரசியல் கைதிகளின் உறவினர்கள் அனுமதி பெற்றுத்தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  அரசிடம் உத்தியோகபூர்வமான கோரிக்கையினை முன் வைப்போம்.

கடந்த 12 ஆம் திகதி ராஜாங்க அமைச்சர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற வேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் குறிப்பாக இருவரை அழைத்து முழந்தாளில் அமர்த்தி தனது சுய பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியினால் நெற்றியில் குறி வைத்து அச்சுறுத்தி உள்ளார். இந்த நிமிடமே இந்த இரு உயிர்களையும் பறிக்க தயார் என்ற நிலையில் அச்சுறுத்தியுள்ளார். இதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது.

அத்துடன் குறித்த இராஜாங்க அமைச்சரை அனைத்து பதவிகளில் இருந்தும் அரசாங்கம் நீக்க வேண்டும் என எமது அமைப்பு உத்தியோகபூர்வமாக கோருகின்றது.
கைது செய்யப்பட்ட நபர்களை அவர்களின் நலன்களை பேணிப்பாதுகாக்க வேண்டியவர்தான் அவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இது எந்த பின்னணியில் இடம்பெற்றுள்ளது என்பதனை தான் பார்க்க வேண்டும்.

மனித உரிமைப் பேரவை, தமிழ் மக்களை காப்பாற்றப் போகின்றோம் என்ற ஓர் முக்கிய கட்டமைப்புக்காக காட்டப்படும் கட்டமைப்பு. இது இலங்கை தொடர்பாக வாய்மூலமான அறிக்கையை வெளியிட்டிருக்கும் சூழலில் தான் இந்த கைதிகள் மீதான கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அச்சுறுத்தப்பட்டது பயங்கரவாதச் சட்டம் ஒரு கொடுமையான சட்டம், அதனை நீக்க வேண்டும். அல்லது மீளாய்வு செய்யப்பட வேண்டும் என மனித உரிமைப் பேரவை கூறிய நிலையில் கைதிகள் மீதான அச்சுறுத்தல் சாதாரண விடயம் அல்ல. இது எதைக் காட்டுகின்றது என்றால், எந்தளவுக்கு இலங்கை அரசு மனித உரிமை பேரவையை மதிக்கின்றது என்பதை காட்டுகின்றது. ஆணித்தரமாக உலகிற்கு காட்டும் வகையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்றைய அவல நிலை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெயரில் பெரும்பாலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தம்மை அடையாளப்படுத்தி மோசமான குற்றவாளியை விசாரிக்கும்படி அனுமதி அளித்துள்ளது. நம் மக்கள் சரியான கோணத்தில் இதனை புரிந்து கொண்டு விளங்கிக் கொண்டு தமிழ் மக்கள் மோசமான துரோகங்களை நேரடியாகத் தடுக்க வேண்டும் என நாம் அவசரமாக கேட்டுக் கொள்கின்றோம். அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் தம் உறவுகளின் பாதுகாப்பு தொடர்பாக அச்சம் கொள்வதாகவும் அவர்களை நேரில் சென்று பார்வையிடவும் விரும்புகின்றனர். இந்த கோரிக்கையை அனுமதிக்கும்படி அரசிடம் உத்தியோகபூர்வமாக  முன்வைக்கவுள்ளோம் என்றார்.


யாழ்.தர்மினி

Exit mobile version