Home செய்திகள் அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் கைவிட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிவிடுங்கள்; சுரேஷ்

அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் கைவிட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிவிடுங்கள்; சுரேஷ்

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிவிடுங்கள்
இலங்கை அரசாங்கம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் மீண்டும் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இந்த சந்தேகத்தைப் போக்கும் வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும். அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் கைவிட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிவிடுங்கள் என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

கடந்த புதன் கிழமை (13.10.2021) அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளரான ஐயாத்துரை குகன் அவர்களை கிளிநொச்சி இரணைமடு காவல்நிலையத்தைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக்கொண்டவர்கள் அவரது இல்லத்திற்குச் சென்று அவரை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

எந்தவித குற்றச்சாட்டும் இல்லாத ஒரு சூழலில், அவர் ஒரு ஜனநாயக ரீதியிலான அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர் என்று தெரிந்து கொண்டு அவரது சமூக சேவையை தடுத்து நிறுத்தும் வகையிலும் அவரை அச்சுறுத்தும் வகையிலும் புலனாய்வுப் பிரிவினர் நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது. பொலிசாரோ அல்லது அவர்களது புலனாய்வுப் பிரிவினரோ ஒருவர்மீது குற்றச்சாட்டு இருக்கும் பட்சத்தில் விசாரிப்பது இயல்பானது. அது அவர்களது கடமையும்கூட. ஆனால் எத்தகைய குற்றச்சாட்டும் இல்லாமல் விசாரணைக்கு உட்படுத்துவதென்பது அவரையும் அவரது குடும்பத்தையும் அவரது ஜனநாயகபூர்வமான நடவடிக்கைகளையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்க முடிகின்றது. எமது கட்சி உறுப்பினரான திரு ஐயாத்துரை குகன் அவர்களுக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமாகயிருந்தால் அதற்கு அரசாங்கமும் பொலிசாரும் பொறுப்புக்கூற வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்திற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் தமது ஐந்து நட்சத்திர ஜனநாயகம் பற்றி வக்காளத்து வாங்கி வாய்கிழிய பேசுபவர்கள் நடைமுறையில் அரசியல் கட்சிகளையும் அவர்களது உறுப்பினர்களையும் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தும் செயற்பாடு மீண்டும் தொடங்கிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. அதனைப் போன்றே ஒருபுறம் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தப்போகிறோம் என்று வீரமுழக்கம் இடும் அமைச்சர்கள் மறுபுறத்தில் இத்தகைய ஜனநாயக விரோத செயற்பாடுகளில் இறங்குவதானது கண்டனத்திற்குரிய செயற்பாடாகும்.

நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து இன்றுவரை தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து, அவர்களை தனிநாடுகோரி ஆயுதம் ஏந்த வைத்தது இந்த நாட்டை மாறிமாறி ஆட்சிசெய்த ஆட்சியாளர்களே. உள்ளங்கை புண்ணிற்கு இதயத்தில் மேற்கொண்ட சத்திரசிகிச்சையின் பயனை நாடு இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலையின் காரணமாக ஒட்டுமொத்த நாட்டு மக்களும் தொழிற்சங்கங்களும் வீதியில் இறங்கிப் போராடும் சூழலில், மக்களை பிளவு படுத்தும் நோக்கில் வடக்கு-கிழக்கு மக்களின்மீது அடக்குமுறையையும் அச்சுறுத்தலையும் ஏவிவிடுவதானது நாட்டின் சுபீட்சத்திற்கு எந்த வகையிலும் பலனளிக்காது.

இலங்கை அரசாங்கம் இத்தகைய தான்தோன்றித்தனமான கண்டனத்திற்குரிய ஜனநாயக விரோத செயற்பாடுகளை உடன் நிறுத்தி மக்களின் இயல்பான வாழ்க்கைக்கு வழிசமைக்க வேண்டும் என்று நாம் கோருகின்றோம். இனியாவது சர்வதேசத்தின் நன்மதிப்பைப் பெறுவதற்கு இந்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மைபயக்கும்.

Exit mobile version