Home செய்திகள் மூதூர் பிரதேசத்தில் காணாமல் போன சிறுமி இது வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை- பெற்றோர் குற்றச்சாட்டு

மூதூர் பிரதேசத்தில் காணாமல் போன சிறுமி இது வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை- பெற்றோர் குற்றச்சாட்டு

காணாமல் போன சிறுமி

மூதூர் பிரதேசத்தில் காணாமல் போன சிறுமி: காணாமல் போயுள்ள தனது பிள்ளையை கண்டுபிடித்துத் தருமாறும் பிள்ளைக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட சிறுமியின் தாயார்  திருகோணமலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மூதூர்  காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமி காணாமல் போயுள்ளதாக மூதூர்  காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோரினால் கடந்த (08.12.2021) மாதம் முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஒரு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அச்சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந் நிலையில் சிறுமியின் தாயாரினால் ஊடக சந்திப்பொன்று இன்று  ஒழுங்கு செய்யப்பட்டு,  கருத்து தெரிவிக்கையில்,

“தரம் 8ல் கல்விகற்று வந்த எனது மகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7ம் திகதி காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக மூதூர் காவல் நிலையத்தில் 8ம் திகதி முறைப்பாடு செய்திருந்தேன். எனினும் ஒரு மாதத்திற்கு மேலாகியும் எனது மகளை காவல்துறையினர் கண்டுபிடித்துத் தரவில்லை. இது தொடர்பாக திருகோணமலையில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்திருக்கின்றேன். எனினும் எவ்வித பலனும் இல்லை.

எனது மகள் வகுப்பில் முதலாவது பிள்ளையாகத்தான் வருவார்.  அவரை பல இடங்களிலும் நாங்களும் தேடிப் பார்த்தோம் காணவில்லை. ஒவ்வொரு நாளும் செய்திகளைப் பார்க்கின்ற போது எனக்கு பயமாக இருக்கின்றது. எனது பிள்ளையை எப்படியாவது கண்டுபிடித்துத் தாருங்கள் என பொறுப்பான அனைத்து தரப்பினரிடமும் மன்றாட்டமாக கேட்டுக் கொள்கின்றேன். எனது பிள்ளைக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version