இனப்படுகொலையாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் முடிவல்ல இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் தமிழ் இனபடு கொலை வாரத்தில் இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கம் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இன படுகொலையை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் வழங்கப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ், திருமதி சிவாஜிலிங்கம் மறறும் சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய எம்.கே.சிவாஜிலிங்கம்-

இலங்கையின் அரச படைகளினாலும், சிங்களக் காடையர் குழுக்களாலும் தமிழ் இனப் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் பொதுமக்களுக்கு எமது அஞ்சலிகள்.

தமிழ் மக்கள்மீதான இனப்படுகொலை, போர்க் குற்றங்களுக்கான குற்றவாளிகளைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி எமது மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வோம்.

தமிழ் இனப் படுகொலைகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்தவும். ஈடுசெய் நீதி கிடைக்கவும் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் அரசியல் தீர்வைக் காண சுதந்திரத்திற்கான பொதுசன வாக்கெடுப்பு ஒன்றினை நடாத்த வேண்டும்.

ஒன்றை இலங்கையின் வடக்கு – கிழக்குப் பிராந்தியத்தில் வசிக்கும் மக்களும், 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் வாழ்ந்துவரும் பரம்பரையினரும் (புலம்பெயர் மக்களும் உட்பட) கலந்துகொள்ளும் வகையில் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்த முன்வருமாறு சர்வதேச சமூகத்தைக் கோருகின்றோம். கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்பட்ட தமிழ் மக்களுக்குச் சர்வதேச நீதி கிடைக்கச் செய்வோம் என எம். கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.