ஜப்பானில் ஜி-7 உச்சி மாநாடு: ரஷ்யா மீது கூடுதல் தடை விதிக்க வாய்ப்பு

ஜப்பானில் நடக்கும் ஜி 7 உச்சி மாநாட்டில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமாவில் மே 19 – 21 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர்.

முதல் நிகழ்வாக, ஹிரோஷிமாவில் உள்ள நினைவரங்க பூங்காவில் உலக நாடுகளின் தலைவர்களை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வரவேற்றார். பின்னர் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டால் பெரும் பேரழிவை சந்தித்த மக்களின் நினைவாக ஹிரோஷிமாவில் உள்ள நினைவரங்கில் உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜி 7 உச்சி மாநாட்டில், முக்கிய நிகழ்வாக வரும் ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடியாக கலந்து கொள்கிறார். இதனை உக்ரைன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

ஜெலன்ஸ்கி கலந்து கொள்வதன் மூலம், ஜி 7 உச்சி மாநாட்டில் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 1000  காவல்துறையினர் ஹிரோஷிமாவில் களம் இறங்கி உள்ளனர். இதற்கிடையே அணுஆயுத போர்கள் வேண்டாம் என்றும் , காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலக நாடுகளின் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.