எரிபொருள் தட்டுப்பாடா? தட்டுப்பாடாக்கப்படுகின்றதா?

IMG20220423104703 எரிபொருள் தட்டுப்பாடா? தட்டுப்பாடாக்கப்படுகின்றதா?

அம்பாறை மாவட்டம்: மாதம் தோறும் 5 பவுசர் பெற்றோல் மாத்திரமே பயன்படுத்தப்பட்ட நிலையில் மாதம் முடிவடைவதற்கு முன்னர் 8 பவுசர் பெற்றோல் கொண்டுவரப்பட்டாலும் பெற்றோலுக்கான கேள்வி அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதன் காரணமாகவே மக்கள் இன்னும் நீண்ட வரிசைகளில் பெற்றோலுக்காக காத்திருப்பதையும் அறிய முடிகின்றது.

இன்று அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலே இந்த தகவல் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் மூலமாக  அறியப்பட்டது.

இந்நிலையில் எரிபொருள் வழங்கும் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசைகளில் மக்கள் தொடர்ந்தும் காத்திருப்பதையும் எரிபொருள் கொண்டுவரும் வாகனத்தை கூட குழுமியிருந்து வரவேற்று பார்வையிடும் நிலையினையும் காண முடிகின்றது.

ஆலையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று நண்பகல் முதல் நீண்ட நேரமாக காத்திருந்த மக்களுக்கு    எரிபொருள்  வழங்கும் செயற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எது எவ்வாறாயினும் தொடர்ச்சியாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசைகளில் மக்கள் காத்திருக்கும் நிலையில் அதிகமான பொதுமக்கள் பெற்றோல் தட்டுப்பாடு வரக்கூடும் எனும் நோக்கில் எரிபொருளை சேமித்து வருகின்றார்களா எனும் சந்தேகமும் எழுகின்றது.

இந்நிலையில் பெற்றோல் உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தால் பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் அரச திணைக்கள் உத்தியோகத்தர்கள் விவசாயிகள் அன்றாட கூலித்தொழிலாளர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் பதுக்கல் வியாபாரிகளினால் 400 ரூபாவிற்கும் மேல் பெற்றோல் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.