ரீயூனியன் தீவில் தஞ்சமடைந்த 46 இலங்கையர்களை அவுஸ்திரேலிய பாணியில் நாடுகடத்திய பிரான்ஸ்

இந்திய பெருங்கடலில் பிரஞ்சு நிர்வாகத்தின் கீழ் உள்ள ரீயூனியன் தீவில் படகு வழியாக தஞ்சமடைந்த 46 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசு நாடுகடத்தும் பாணியில் பிரான்ஸ் அரசு நாடுகடத்தியுள்ளது. அத்துடன் இதுபோன்று படகு வழியாக வருபவர்களுக்கு கொழும்பில் உள்ள பிரஞ்சு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இவர்கள் சட்டவிரோதமாக ரீயூனியன் தீவுக்குள் நுழைந்ததாக விமானம் வழியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

பிரஞ்சு தூதரகத்தின் கூற்றுப்படி, கடந்த டிசம்பர் 24, 2022 அன்று ரீயூனியன் தீவுக்கு சென்றடைந்த இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். இலங்கை கடற்படையின் கூற்றுப்படி, கடந்த டிசம்பர் 02, 2022 அன்று ரீயூனியன் தீவை நோக்கி நீர்கொழும்பிலிருந்து மீன்பிடி படகு வழியாக 46 இலங்கையர்கள் புறப்பட்டிருக்கின்றனர். இதில் 43 பேர் ஆண்கள், 02 பேர் பெண்கள், ஒரு 13 வயது குழந்தை இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

“மனித கடத்தல் மற்றும் கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு பிரான்ஸ் முன்னுரிமை அளிக்கிறது,” என பிரஞ்சு தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது நாடுகடத்தப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம், மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் ஈழத்தமிழர்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் தெகிவளையில் உள்ள கடத்தல்காரர்கள் ஏற்பாட்டில் இவர்கள் ரீயூனியன் தீவுக்கு சென்றதாகவும் இதற்காக ஒவ்வொரு இலங்கையரிடமும் 2 லட்சம் இலங்கை ரூபாய் முதல் 4.50 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.