சீனாவில் சுரங்கம் இடிந்ததால் பலர் பலி, 49 பேரை காணவில்லை

சீனாவில் நிலக்கரி சுரங்கமொன்று இடிந்ததால் நால்வர் பலியானதுடன் மேலும் 49 பேர் காணாமல் போயுள்ளனர்.

சீனாவின் வடபிராந்தியத்திலுள்ள உள் மொங்கோலியா மாகாணத்தில் நேற்று மேற்படி சுரங்கம் இடிந்தது. இதனால், 50 இற்கும் அதிகமானோர் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர் என சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இன்று இரண்டாவது நாளாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், குறைந்தபட்சம் நால்வர் பலியானதுடன் 49 பேர் காணாமல் போயுள்ளனர் என சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காணாமல் போனவர்களை மீட்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

900 இற்கும் அதிகமானோர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.