கரீபிய நாடான ஹைட்டி(Haiti) அதிபர் ஜோவானெல் மோசே கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளி நாட்டவர்களின் சதி இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கரீபியன் கடல் பகுதியில் உள்ள தீவு நாடு ஹைட்டி. இதன் அதிபரான ஜோவானெல் மோசே, போர்ட்டா பிரின்ஸ் நகரில் தனிப்பட்ட வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன் தினம் ஆயுதங்களோடு அவரது வீட்டினுள் நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை சுட்டுக் கொலை செய்தது. இதனை அடுத்து நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டுள்ளது.
அதிபர் கொல்லப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், வெளிநாட்டவர்கள் இதன் பின்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது. கொலம்பியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் 26 பேர் மற்றும் இரண்டு அமெரிக்கர்கள் திட்டமிட்டு இந்த படுகொலையை அரங்கேற்றியுள்ளனர் எனக் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுவரை 17 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், மற்றவர்களை தேடி வருவதாக கூறியுள்ளனர்