Home செய்திகள் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் இலங்கையில் தீவிர செயற்பாடு

வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் இலங்கையில் தீவிர செயற்பாடு

8 வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் இலங்கையில் தீவிர செயற்பாடுபல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இலங்கையில் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஈடுபாடுள்ள நாடுகள் தொடர்பான தகவல்களை பெறவும், எதிர்ப்பிரசார நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கவும் அந்த அமைப்புக்கள் செயல்படுவதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைக்குள் சில நாடுகளின் செயல்பாடுகள், அவர்கள் உள்நாட்டில் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகள் மற்றும் அவர்களின் இராணுவ இருப்பு ஆகியவற்றைக் கூர்ந்து கவனிப்பதே இந்த புலனாய்வு அமைப்புகளின் முக்கிய கவனமாகும்.

இந்தியப் பெருங்கடலில் இலங்கை ஒரு மூலோபாய இடமாக பார்க்கப்படுகிறது. பிராந்திய ஸ்திரத் தன்மைக்கு அச்சுறுத்தலாக சில நாடுகளால் இலங்கை பயன்படுத்தப் படலாம் என்ற அச்சம் சர்வதேச மற்றும் பிராந்திய வல்லரசுகளிடையே ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரிகள் இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது. விடுதலைப் புலிகளுடனான போர் உச்சத்தில் இருந்த போது வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரிகள் இலங்கையில் செயல் பட்டதாக நம்பப்படுகிறது.

போரின் போது, அரச உயர் மட்ட கூட்டங்களை அவர்கள் பதிவு செய்யலாமென்ற அச்சம் ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் இருக்கும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மூடிய கதவு சந்திப்புகளைத் பதிவு செய்யும் நடவடிக்கைகள் பாதுகாப்பு தரப்புக்களால் தடுக்கப் பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊடக அமைச்சரும் அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளருமான கெஹெலிய ரம்புக்வெல இது தொடர்பில் கருத்துதெரிவித்தபோது, வெளிநாட்டு புலனாய்வு அதிகாரிகளை, குறிப்பாக இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டில் இருக்கும் போது அவர்களைக் கண்டறிவது கடினம் என்று கூறினார்.

வெளி நாடுகளின் உளவுத்துறை அதிகாரிகள் செயல்படுவதாக நம்பப்படும் ஒரே நாடு இலங்கை அல்ல என்றும்அவர் கூறினார். “மற்ற நாடுகளிலும் இது நடப்பதை நாங்கள் காண்கிறோம், அங்கு உளவுத்துறை சேகரிப்புக்கு வெளிநாட்டுப் பணிகள் பயன்படுத்தப் படுகின்றன” என்று ரம்புக்வெல கூறினார்.

எவ்வாறாயினும், உள்ளூர் புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், எந்தவொரு வெளிநாட்டவர் இருப்பதன் விளைவாக இலங்கைக்கு அச்சுறுத்தல் இருந்தால் உள்ளூர் அதிகாரிகள் செயல் படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version