இலங்கை – இந்தியாவுக்கிடையே வெளிநாட்டு நேரடி முதலீடுகள்

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் சுற்றுலாத்துறையில் விரைவான முதலீடுகள் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இலங்கையிலுள்ள இந்திய தூதுவருக்கிடையில் நேற்று விரிவான கலந்துரையாட லொன்று நடைபெற்றது.

இந்திய தூதுவர் கோபால் பாக்லே மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (26) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிரதமரின் விசேட கோரிக்கையின் பிரகாரம், நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தித்துறை மற்றும் புகையிரதம் உட்பட போக்குவரத்து அமைப்பின் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்க   இந்திய தூதுவர் இணக்கம் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார சவால்களுக்கு முகம்கொடுத்து இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கிய பங்களிப்புகளுக்கும் எதிர்வரும் காலங்களில் வழங்கவிருக்கும் பங்களிப்புகளுக்கும் பிரதமர் தினேஷ் இதன்போது நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையே காலம் காலமாக இருந்து வரும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு ஆலோசிக்கப்பட்டது.

புதிய இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவியேற்றதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன வாழ்த்து தெரிவித்தார். இந் நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும் கலந்துகொண்டார்.