திருகோணமலை ஒல்லாந்தர் குடா Dutch Bay கடற்கரையில் கரைவலை மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று (28) மாலை 6.30 மணியளவில் நடத்தினார்கள்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கூறுகையில்,“சுற்றுலா அபிவிருத்தி என்ற போர்வையில் உல்லாச விடுதி உரிமையாளர்கள் சட்ட ரீதியற்ற முறையில் கடற்கரையை ஆக்கிரமித்து நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனால் எமது மீன்பிடி உபகரணங்களை பராமரிப்பதிலும் கரைவலை இழுப்பதில் இடப் பற்றாக்குறையை எதிர் கொள்கிறோம். இதுபற்றி அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. பெருந்தொற்று வேளையிலும் நிர்மாணங்கள் இடம் பெற்று வருகின்றது” என்றனர்.
மேலும் அரசானது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதால் தாம் வாழ்வாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப் படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 26 கரைவலை உரிமையாளர்கள் இக்கடற்கரையில் 75 வருடங்களுக்கு மேலாக கடற்தொழில் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.