கூட்டமைப்புக்கு கூட்டுத் தலைமையே தேவை ; வலியுறுத்துகிறார் செல்வம் அடைக்கலநாதன்

கூட்டமைப்புக்கு கூட்டுத் தலைமையே தேவை
சம்பந்தனின் காலத்தின் பின் கூட்டுத் தலைமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படும். சுமந்திரனின் தனிப்பட்ட கருத்தை பெரிய விடயமாகப் பார்க்கத் தேவையில்லை. கூட்டமைப்புக்கு கூட்டுத் தலைமையே தேவை  என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மன்னாரில் அவரின் அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோவின் தலைவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பது கூட்டுத்தலைமையாக இருக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை தான் ஏற்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து. அதை ஏற்பதா? இல்லையா? என்பதை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முடிவெடுக்கும். சம்பந்தனின் காலத்தின் பின் கூட்டுத்தலைமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படும். அவரின் தனிப்பட்ட கருத்தை பெரிய விடயமாக பார்க்கத் தேவையில்லை.

இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபை தேர்தலை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாறிமாறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கிறார்கள். அரசியல் சாசனம் திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர்தான் தேர்தல் இடம்பெறும் எனக் கூறுகிறார்கள். அடுத்த வருடம் தேர்தலை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள். புதிய தேர்தல் முறையில்தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றார்கள். இவர்களின் கருத்துக்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது டில்லிக்கு செல்லும்போது 13ஐ விட அதிகாரங்களை கூடுதலாக அளிப்பதாக – 13 பிளஸ் என்று சொல்லி, வெளியில் வந்த பின் 13ஐ கொடுக்க முடியாது என்று பேசுகின்ற சந்தர்ப்பங்கள்போல் உள்ளன.

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எங்களுடைய கோரிக்கை பிரதானமானதாக உள்ளது. அதே நேரத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்படுகின்ற அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்துகின்ற ஒரு வழியை கையாளுகின்ற முறைமையை இந்தியா செய்ய வைக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை.

அதிகாரம் இல்லாத மாகாண சபையை நாங்கள் ஏற்றுக் கொண்டு அதனூடாக எங்களின் நிலங்களை பாதுகாப்பது மற்றும் எமது பிரச்னைகளை கையாள்வது என்பது மிக ஒரு கேலித்தனமான விடயமாக நாங்கள் பார்க்கின்றோம். எனவே, 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பதுதான் சிறந்ததாக அமையும். இந்தியா இவ்விடயத்தில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கோருகிறோம்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் கட்டுப்படுத்தப்பட்ட வேண்டும். மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது மீனவர்களை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கையில் இறங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைளை அவர் எடுக்கும் போது அவருடன் சேர்ந்து செயல்பட தயாராக இருக்கிறோம். பாதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
எனவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க திட்டத்தை வகுத்து செயல்படுவதே சாலச் சிறந்தது.

விவசாயிகள் தமது நகைகளை அடகு வைத்தும், வங்கி கடன்களை பெற்றுமே விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். தற்போது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காலமாக உள்ளது. ஆனால், உரம் இல்லை – மருந்து இல்லை. இவ்வாறான சூழ்நிலையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தேவைக்கான உணவுக்குக்கூட பிரச்னை ஏற்படும் நிலை உள்ளது. இலங்கை பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. விவசாயிகளுக்கு உரம் வழங்கி விவசாயத்தை ஊக்குவிக்கும் செயலை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் – என்றார்.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad கூட்டமைப்புக்கு கூட்டுத் தலைமையே தேவை ; வலியுறுத்துகிறார் செல்வம் அடைக்கலநாதன்