Home செய்திகள் வவுனியாவில் 22 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை : மழை காரணமாக விவசாயிகள் பதிப்பு

வவுனியாவில் 22 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை : மழை காரணமாக விவசாயிகள் பதிப்பு

விவசாயிகள் பதிப்பு

வவுனியா: 22 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பெரும் போகத்தில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், மழை காரணமாக புழுதி விதைப்பில் ஈடுபட்ட சில விவசாயிகள் பதிப்பு அடைந்துள்ளதாகவும் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் என்.விஸ்ணுதாசன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் பெய்து வரும் மழை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘குறுகிய காலத்தில் அதிகளவிலான மழை பெய்கின்றது. இதனால் குளங்கள் உடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது. எல்லோரும் எப்போதும் குளங்கள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்.

ஏதாவது உதவி தேவையெனில் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு அல்லது உங்கள் பிரதேசங்களில் உள்ள கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உடனடியாக அறிவிக்கவும்.

வவுனியா மாவட்டத்தில் பெரும் போகத்தில் 22 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெற் பயிற் செய்கையில் ஈடுபட்டுள்ளோம். தற்போது 60 வீதத்திற்கு அதிகமான வயல் நிலங்கள் பயிரிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டதற்கு அமைவாக 25 ஆம் திகதிக்கு பின் அதிக மழை வீழ்ச்சி வடக்கில் ஏற்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் புழுதி விதைப்பில் ஈடுபட்டுள்ள சிலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஏற்கனவே, குளங்கள் துப்பரவு செய்யப்பட்டு அதில் உள்ள பிரச்சனைகள் இனங்காணப்படாமல் இருந்தமையால் குளத்தில் என்ன பிரச்சனை உள்ளது என்பது தெரியாது. அப்பகுதி விவசாயிகளுக்கு கூட அது தெரியவில்லை. மழை பெய்து உடைக்கும் நிலையில் தான் அதனை பார்க்க கூடியதாகவுள்ளது.

இதனால் விவசாயிகள் தங்கள் குளங்களை துப்பரவு செய்து அதில் உள்ள பிரச்சனைகளை முன் கூட்டியே அடையாளம் கண்டு கொள்ளவும். இதன் மூலம் தான் வயல் நிலங்களையும், குடியிருப்புக்களையும் பாதுகாக்க முடியும்.

நொச்சிகுளத்தில் 5 வருடமாக உமை இருந்துள்ளது. அதனை தடுக்காது இருந்துள்ளார்கள். அதனாலேயே குறித்த குளம் உடைப்பெடுக்கும் நிலைக்கு சென்றது. தற்போது தடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் சிறிய குளங்கள் அதிகம். எனவே மக்கள் கவனமாக இருக்கவும்.

செட்டிகுளம் துட்டுவாகை குளத்தில் உடைப்பெடுக்க கூடிய நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதனை உடைப்பெடுக்காது தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version