கிழக்கு மாகாணம்: தமிழ்தேசிய ஆதரவாளர்களை இலக்கு வைத்து முகப்புத்தகங்கள் ஊடாக போலிப்பிரசாரங்கள்

அண்மைக்காலமாக இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ரீதியான போலிகள் தமிழ் மக்களினால் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்த தமிழ் மக்களில் பெரும்பாலானோர் தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழையும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய பற்றாளர்களை இலக்குவைத்து சமூக ஊடகங்கள் ஊடாக தாக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

பாரியளவிலான நிதிகள் வழங்கப்பட்டு சமூக ஊடகங்கள் ஊடாக இவ்வாறான தமிழ் தேசிய பற்றாளர்களை தாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகின்றது.

குறிப்பாக தமிழ் தேசிய பற்றாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்ப ரீதியான செயற்பாடுகள் மற்றும் உறவினர்கள் ஆகியோரை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடுகளால் தமிழ் தேசியத்தினை ஆதரிப்போர் வெளிப்படையாக முன்வருவதற்கு தயங்கும் நிலையேற்பட்டுள்ளது.

குறிப்பாக ஒட்டுக்குழுக்கள் இவ்வாறான செயற்பாடுகளை பரவலாக முன்னெடுத்துள்ள நிலையில், இதனை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்தேசிய பரப்பில் உள்ள இளம் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Tamil News