முகநூல் காதலால் விபரீதம்- இரு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்

முகநூல் காதலால் விபரீதம்

முகநூல் காதலால் விபரீதம்

முகநூல் காதலால் ஏற்பட்ட விபரீதத்தில் காணாமல் போயிருந்த முல்லைத்தீவு சிறுமிகள் இருவரும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிகள் இருவரும் கடந்த 16ம் திகதி அன்று மாலைநேர வகுப்பிற்கு என புறப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தனர். இதையடுத்து அவர்களது பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினர்கள் அவர்களை தேடிய நிலையில் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

குடும்பத்தினர் மற்றும் கிரமத்தவர்கள்,  காவல்துறையினர் இணைந்து தேடிய நிலையில் நேற்று(18) மாலை புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் வைத்து சிறுமிகள் இருவரும் மீட்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமிகள் இருவரும் முல்லைத்தீவு  காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. குறித்த சிறுமிகளில் ஒருவர் முகநுால் ஊடாக மட்டக்களப்பு செங்கலடிப் பகுதி இளைஞர் ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தி  பேசியுள்ளார். செங்கலடி இளைஞன் சிறுமியினை அங்கு வருமாறு அழைத்துள்ளதை தொடர்ந்து சிறுமி தனது நண்பியுடன் வீட்டிற்கு தெரியாமல் மிதிவண்டியில் மாலைநேர கல்விக்கு செல்வதாக கூறிவிட்டு பேருந்தில்   மட்டக்களப்பு செங்கலடிக்கு சென்றுள்ளார்கள்.

செங்கலடி இளைஞன் இருவரையும் காரில் ஏற்றிசென்று தான் பேசிய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர்களை   யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பேருந்தில் அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறு இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணத்தில் இறங்கிய நிலையில், யாழ் நகரப் பகுதியில் சுற்றிதிரிந்துள்ளனர்.

அந்நேரத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாது குறித்த சிறுமிகள் தடுமாறி கொண்டிருப்பதை அவதானித்த இரண்டு இளைஞர்கள் சிறுமிகளுக்கு உதவி செய்வதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இவ்வாறு மட்டக்களப்பபு மற்றும் யாழ்ப்பாணத்தில் வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட குறித்த சிறுமிகள் பேருந்து மூலமாக புதுக்குடியிருப்பு நகர்பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து காவல்துறையினரால் அவர்கள்  மீட்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் புதுமாத்தளன் பகுதியில் இருந்து காணாமல் போயிருந்த சிறுமிகள் எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து முல்லைத்தீவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இருவரிடத்திலும் மேற்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தினை தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டனர்.  மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Tamil News