Tamil News
Home செய்திகள் ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்தவேண்டும்- புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர்.

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்தவேண்டும்- புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர்.

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சுதந்திரமான சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்தவேண்டும் என புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜி பட்டர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து மனித உரிமைகளையும் ஊக்குவித்தல் பாதுகாத்தல் என்ற கருப்பொருளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற பொதுவிவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்

அவர் மேலும் குறிப்பிட்டதாவது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கையையும் பரிந்துரைகளையும் நாங்கள் பாராட்டுகின்றோம்.

இன்று நாங்கள் ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பில் காணப்படும் சவால்கள் குறித்தும் சாட்சிகளின் பாதுகாப்பிற்கான பொறிமுறையொன்றை உருவாக்கவேண்டிய அவசரதேவை குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தவுள்ளோம்.

தமிழ் மக்களை பொறுத்தவரை 46\1 தீர்மானத்தின் அடிப்படையிலான ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை போதுமானதல்ல அதனை முழுமையான சுதந்திரமான சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்தவேண்டும்.

தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நீதி வழங்குவதற்கான முழுமையாக ஆதாரங்களை சேகரிப்பது அடிப்படையாக அமையும் அதேவேளை சாட்சிகளை பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் மிகவும் பலவீனமாக உள்ளன.

புலனாய்வு உத்தியோகத்தர்களை அச்சுறுத்துவதற்கு மிரட்டுவதற்கு பயன்படுத்துவது என்பது சாட்சியங்களை ஒன்றுசேர்ப்பதற்கு பெரும் தடையாக உள்ளது.

அரசாங்கத்திலிருந்து சாட்சிகளை பாதுகாப்பதற்கானசுயாதீனமான பொறிமுறையை ஐநா குழு முன்வைக்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.மேலும் அச்சுறுத்தல்களிற்கு நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவளிக்கும் அரசாங்க அதிகாரிகளை தண்டிக்கவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

வீடுகளிற்கு வரும் பாதுகாப்பு படையினர் பாலியல்வன்முறைகளில் ஈடுபடலாம் என்ற அச்சங்களும் பயங்கரவாத விசாரணைபிரிவிடமிருந்து விசாரணைக்கு வருமாறு கடிதங்கள் கிடைப்பதும் இலங்கையில் உண்மையில் இடம்பெறும் சம்பவங்கள்.

மனித உரிமை செயற்பாட்டாளர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில் இருந்து விசாரணைக்கு வருமாறுஅழைக்கப்படுகின்றனர்.

தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு காரணமானவர்களிற்கு எதிராக ஐநா உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் 13 வருடங்கள் தாமதமாகிவிட்ட நீதியை வழங்கவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தமிழ் மக்களிற்கு சுயநிர்ணயஉரிமையை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வையும் முன்வைக்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Exit mobile version