கூட்டாட்சி குறித்து சிந்தியுங்கள் என்று மோடியே கூறிய பின்பும் 13ஐ கேட்பதா? கேள்வி எழுப்புகிறார் சிறிதரன்

கூட்டாட்சி குறித்து சிந்தியுங்கள்
கூட்டாட்சி குறித்து சிந்தியுங்கள் என்று 6ஆண்டுகளுக்கு முன்பே பாரதப் பிரதமர் நரேந்திர மோடியே கூறியுள்ள நிலையில் நாம் இன்றும் அந்த 13 ஐ கோரப் போகின்றோமா என்ற பெரும் கேள்வி உள்ளது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கு எழுதும் கடிதம் தொடர்பில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
அவர் மேலும் தெரிவிக்கையில்-

1987இல் யாருக்காக ஒப்பந்தம் எழுதப்பட்டதோ அவர்களோடு போரிடுவதாகவே இறுதியில் அந்த ஒப்பந்தம் இருந்தது. அதனால் இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தால் எமக்கு எந்த முன்னேற்றமும் கிடையாது. இந்தியா எப்போதும் இலங்கையில் பூகோள ரீதியில் கரிசனையாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் இந்திய மாநில அதிகாரத்துக்கு மேலதிகமாக இருக்கக்கூடாது என்பதிலும் குறியாக இருக்கின்றது.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அடிப்படையில் சூழலில் வேறுபாடு உண்டு.

ஜெயலலிதா நிறைவேற்றிய கண்டனத் தீர்மானத்தை குறைக்கும் வகையிலான ஓர் கோரிக்கையை நாம் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்ராலினிடம் முன் வைக்கப்போகின்றோம். இதனை ஏன் கட்சியில் இன்னும் விரிவாகப் பேசவில்லை.
அரசியல் தீர்வு தொடர்பில் தெளிவான பார்வை இருந்திருக்கவேண்டும். தெளிவாகப் பயணிக்க வேண்டிய கூட்டமைப்பும் குழம்பியிருக்கின்றதோ என்ற எண்ணம் பலரிடம் தோன்றுகின்றது.

முதலில் எழுதிய கடித்த்தில் சமஷ்டி வடிவில் எமது கோரிக்கைகளை உள்ளடக்கிய பல விடயங்கள் இருந்தன. ஆனால் தற்போது இரண்டாவதாக எழுதிய வரைவில் பல விடயங்கள் நீக்கப்பட்டிருப்பதனால் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு அதனை முழுமையாக நிராகரித்துள்ளது.

தேர்தலை நடத்துமாறு கோர பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதவேண்டிய அவசியமோ நியாயமோ இல்லை. ஏனெனில் இந்த அரசு போன்று நாம் தேர்தலைக் கண்டு பயப்பிடவில்லை. தேர்தலுக்கு கூட்டமைப்பு தயாராகவே இருக்கின்றது.

வெளியில் ஓர் மாயை உண்டு. அதாவது ரெலோ கொண்டு வந்த நல்ல விடயத்தை தமிழ் அரசுக் கட்சி எதிர்ப்பதாக எண்ணுகின்றனர். இந்த 13 கோருவதுதான் அந்த நல்ல விடயம்.

இந்தியாவின் கொல்லைப்புறம் இன்னுமோர் நாடு வந்த பின்பும் அயல் நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடமாட்டோம் என இந்தியா தொடர்ந்தும் கூறப்போகின்றதா என்பதை இந்தியாதான் சிந்திக்க வேண்டும்.

ரவூவ் ஹக்கீமைப் பொறுத்தமட்டில் அவரது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே அவரது கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் தமிழர்களின் தீர்வு விடயத்தில் எவ்வாறு தீர்வை முன்வைப்பது.

எங்கள் கொள்கையோடு நில்லுங்கள் என நாம் அவர்களை நிர்ப்பந்திக்க முடியாது. அதேபோல் தமது நிலைப்பாட்டுடன் ஒத்துபோகவேண்டும் என அவர்கள் எம்மை திணிக்க முடியாது” என்றார்.

Tamil News