Tamil News
Home செய்திகள் போர்கால குற்றங்கள் குறித்து விசாரணை செய்யவேண்டிய தனது கடப்பாட்டை இலங்கை நிறைவேற்றவேண்டும்

போர்கால குற்றங்கள் குறித்து விசாரணை செய்யவேண்டிய தனது கடப்பாட்டை இலங்கை நிறைவேற்றவேண்டும்

இலங்கை அரசாங்கம் முட்டுக்கட்டை போடுவதை நிறுத்திவிட்டு பலர் இன்னமும் துன்பத்தை அனுபவிக்கும் மிகவும் பாரதூரமான போர்கால குற்றங்கள் குறித்து விசாரணை செய்யவேண்டிய தனது கடப்பாட்டை நிறைவேற்றவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் நீதிக்கான முயற்சியை தீவிரமாக தொடர்வதற்காக ஐநாவின் பொறுப்புக்கூறல் திட்டத்துடன் உலக நாடுகள் தீவிரமாக இணைந்து செயற்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் ஈவிரக்கமற்ற உள்நாட்டு யுத்தம் 2009 இல் முடிவிற்கு வந்த இறுதி தருணங்களில் கொல்லப்பட்டவர்களை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தின் மூலம் மே 18 ம் திகதி இலங்கை தமிழர்கள் நினைவுகூறவுள்ளனர் என மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளிற்கு எதிரான மோதலின் போது இலங்கை இராணுவம் பாதுகாப்பு வலயங்கள் மீது குண்டுதாக்குதல்களை மேற்கொண்டவேளை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என  அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசபடையினர் பெருமளவு விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களை அவர்களின் ஆதரவாளர்களான பொதுமக்களை படுகொலை செய்தனர் பலவந்தமாக காணாமல்போகச்செய்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

14 வருடங்களின் பின்னர் இலங்கை அரசாங்கம் தனது படைகள் இழைத்த கொடுமைகளை மறுக்கும் நிராகரிக்கும் நிலையிலேயே உள்ளது  எனவும் தெரிவித்துள்ள மீனாக்சி கங்குலி  தங்கள் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காக தொடர்ச்சியாக முயற்சிகளில் ஈடுபட்டுள்ள காணாமல்போனவர்களின் தாய்மார்கள் குழு பாதுகாப்பு தரப்பிடமிருந்து தொடர்ச்சியாக துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்  எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தகவல்களையோ நீதியையோ வழங்க மறுக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பதற்காக அரசாங்கம் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தை  ஏற்படுத்தியது ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள மீனாக்சி கங்குலி கடந்த ஏப்பிரலில் ஐநா அறிக்கை கடந்தகாலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை நியமித்தமைக்காக இந்த அமைப்பை சாடியிருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version